திருச்சியில் வெவ்வேறு இடங்களில் கஞ்சா விற்ற 2 ரவுடிகள் உள்பட 4 பேர் கைது.
பெண்ணுக்கு வலை வீச்சு.

திருச்சி எடமலைப்பட்டி புதூர் ரெட்டைமலை கோவில் செல்லும் ரெயில்வே பாலம் அருகில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் ஞானகுமார் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்த பொழுது ஒரு பெண் உள்பட மூன்று பேர் நின்று கொண்டு கஞ்சா விற்றுக் கொண்டு இருந்தனர். அப்பொழுது அவர்கள் போலீசார் வருவதை பார்த்து அங்கிருந்த பெண் தப்பி ஓடிவிட்டார். பிறகு போலீசார் அங்கு இருந்த இரண்டு பேரையும் பிடித்து விசாரணை செய்த போது தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியை சேர்ந்த ராஜேந்திர பிரசாத் (வயது 36) மற்றும் ராம்ஜி நகர் மில் காலனி பகுதியை சேர்ந்த ஜானகிராமன் (வயது 47 ) என்பது தெரியவந்தது.பிறகு மேற்கண்ட இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 1 கிலோ 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் தப்பி ஓடிய கல்லுக்குழி கள்ளர் தெருவை சேர்ந்த ஜேம்ஸ் அலெக்ஸ் என்பவரது மனைவி சண்முகவள்ளி (வயது 50) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதே போன்று திருச்சி பாலக்கரை காஜாப்பேட்டை பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த மதுரை வீரன் சுவாமி கோவில் தெருவை சேர்ந்த சந்திரசேகரன் (வயது 33)
கீழப்புதூர் பகுதியை சேர்ந்த விஜயபாபு (வயது 28 )ஆகிய இரண்டு ரவுடிகளை பாலக்கரை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் பிடித்து வழக்கு பதிந்து அவர்களை கைது செய்து 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் ரவுடி பட்டியலில் உள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

