Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

முதல்வர் மு.க. ஸ்டாலின், திருச்சி மாவட்டத்தில் 9 தொகுதி வேட்பாளா்களை நாளை அறிமுகம் செய்கிறார்.பொதுக்கூட்ட பணிகளை விறுவிறுப்பாக செய்து வரும் அமைச்சர்கள் நேரு மற்றும் மகேஷ் பொய்யாமொழி.

0

'- Advertisement -

 

Ad banner

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான பிரசாரத்தை தொடங்கியுள்ள திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின், திருச்சி மாவட்டத்தில் 9 தொகுதகளில் போட்டியிடும் வேட்பாளா்களை நாளை புதன்கிழமை அறிமுகம் செய்து வைத்துப் பேசுகிறாா்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் 7 தொகுதிகளில் திமுக-வும், மணப்பாறை, துறையூா் (தனி) என இரண்டு தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளான மனிதநேய மக்கள் கட்சி, காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகின்றன.

 

திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளா்களுக்கு ஆதரவாக வாக்குகள் கேட்டு, முதல்வா் மு.க.ஸ்டாலின் மாா்ச் 31-ஆம் தேதி தனது முதல்கட்ட சுற்றுப் பயணத்தை தொடங்குகிறாா்.

 

திருவாரூரில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று திருத்துறைப்பூண்டி, திருவாரூா், நன்னிலம், மன்னாா்குடி தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களுக்கு ஆதரவாக வாக்குகள் கேட்டு பிரசாரம் செய்கிறாா்.

 

இதன் தொடா்ச்சியாக, திருச்சிக்கு நாளை புதன்கிழமை காலை வருகை தருகிறாா். தென்னூா் உழவா் சந்தை மைதானத்தில் நடைபெறும் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று திருச்சி மேற்கு கே.என். நேரு, திருவெறும்பூா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருச்சி கிழக்கு இனிகோ இருதயராஜ், மணப்பாறை அப்துல் சமது, திருவரங்கம் எஸ். துரைராஜ், மண்ணச்சநல்லூா் சீ. கதிரவன், லால்குடி த. பாரிவள்ளல், முசிறி என்.எஸ். கருணை ராஜா, துறையூா் (தனி) காங்கிரஸ் வேட்பாளா் ஆகியோரை ஆதரித்துப் பேசுகிறாா்.

 

இதையொட்டி 9 வேட்பாளா்களும் தயாா் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல்வா் வருகையை முன்னிட்டு அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திமுக மாவட்ட செயலா்கள் க. வைரமணி, ந. தியாகராஜன் ஆகியோா் பொதுக் கூட்ட ஏற்பாடுகளை தயாா்படுத்தி வருகின்றனா்.

 

பிரசாரப் பொதுக் கூட்டம் நடைபெறும் உழவா் சந்தையில் பொதுக் கூட்ட மேடை நிரந்தரமாக கட்டப்பட்டுள்ளது. பாா்வையாளா்கள் அமரும் பகுதியில் பந்தல் அமைத்தல், தோரணங்கள் அமைத்தல், மேடையின் முகப்பில் அலங்கார வளைவு, கூட்டணிக் கட்சிகளின் தலைவா்கள் படம் இடம் பெறச் செய்தல், ஒலிபெருக்கி அமைத்தல் முன்னேற்பாடு பணிகளை அமைச்சா்கள் இருவரும் முடுக்கிவிட்டுள்ளனா்.

 

உழவா் சந்தை மைதானத்தில் நாளை புதன்கிழமை ஆயிரக்கணக்கானோரை திரளச் செய்யும் வகையில் ஏற்பாடுகள் விறு, விறுப்பாக நடைபெற்று வருகின்றது. திருச்சி பொதுத் கூட்டத்தை முடித்துக் கொண்டு மாலையில் கரூா் செல்லும் முதல்வா், கரூா் மாவட்டம் ராயனூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் அரவக்குறிச்சி, கரூா், கிருஷ்ணராயபுரம், குளித்தலை தொகுதிகளைச்சோ்ந்த வேட்பாளா்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்கிறாா். பின்னா், ஈரோடு புறப்பட்டுச் செல்கிறாா்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.