தேசிய அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்று அந்தியோதயா ரயிலில் திருச்சி திரும்பிய மாணவர்களின் பதக்கங்கள் திருட்டு .
இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு நடத்திய தேசிய அளவிலான சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு இடையில் கராத்தே போட்டியானது மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் நவம்பர் 14- முதல் 18-ம் தேதி வரை நடைபெற்றது.
இந்த போட்டியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 260 சி.பி.எஸ்.இ பள்ளிகளிலிருந்து 2000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த போட்டியில் திருச்சி திருவெறும்பூர் பெல் வளாகத்தில் உள்ள ஆர்.எஸ்.கே பள்ளி சார்பில் மாணவர்கள் பங்கேற்றனர்.
கராத்தேயின் குமிதே பிரிவில் பிரணவ்குமார் வெள்ளிப் பதக்கமும், நிகிலேஷ், சிவேஷ் மற்றும் ரோகித் மூவரும் வெண்கலப் பதக்கமும் வென்றனர். இந்த நிலையில் பதக்கம் வென்று திரும்பிய கராத்தே மாணவர்களுக்கு திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் பயிற்சியாளர் ஆனந்தகுமார் தலைமையில் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து பொன்னாடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். முதன்முறையாக போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தொடர்ந்து பல்வேறு பயிற்சிகள் மேற்கொண்டு அடுத்தக்கட்ட போட்டிக்கு தயாராகி இன்னும் பல பதக்கங்களை வென்று தாய் நாட்டிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்ப்போம் என்று மாணவர்கள் பேட்டியளித்தனர்.
இதனிடையே வெற்றி பெற்ற கராத்தே மாணவர்கள் அந்தியோதயா ரயிலில் திருச்சிக்கு வந்து கொண்டிருந்தபோது கண் அயர்ந்த நேரத்தில் பதக்கங்கள், சான்றிதழ்கள், துணிகள் அடங்கிய பையினை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர் .இது குறித்து மாணவர்கள் ஆன்லைனில் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

