கலெக்டரின் பெயரில் உள்ள வங்கிக் கணக்கை ஆய்வு செய்த தணிக்கை குழுவினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
மூன்று காசோலைகள் மூலம் 11 லட்சத்து 63 ஆயிரத்து 539 ரூபாய் மோசடியாக எடுக்கப்பட்டிருந்தைத் தணிக்கை குழுவினர் கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டரின் கவனத்துக்குத் தகவல் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து துணை கலெக்டர் ஹர்ஷத் பேகம் என்பவர், வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
அதன்பேரில் இணை கமிஷனர் மனோகர் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் சுந்தரவடிவேல் மேற்பார்வையில் உதவி கமிஷனர் ராஜசேகரன் தலைமையில் வடக்கு கடற்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் அருணாச்சலராஜா மற்றும் போலீஸார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கலெக்டரின் கையெழுத்தைப் போலியாகப் போட்டு காசோலைகள் மூலம் பணம் எடுக்கப்பட்ட தகவல் தெரியவந்தது.
இதையடுத்து இந்த மோசடியில் ஈடுபட்ட சென்னை கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றிய திருவள்ளூர் மாவட்டம், பாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரமோத் (வயது 30), தரமணியைச் சேர்ந்த சுப்பிரமணி (வயது 31) ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர்.
பிரமோத் தன்னுடைய நண்பரான திருவள்ளூர் மாவட்டம் தினேஷ் என்பவரின் வங்கிக் கணக்குக்கு கலெக்டரின் என்.ஆர்.ஐ வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை அனுப்பி மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
அதனால் தினேஷைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். விசாரணைக்குப் பிறகு தினேஷையும் போலீஸார் கைது செய்தனர். இவர் டிரைவராக வேலை செய்து வருகிறார்.
கைது செய்யப்பட்ட பிரமோத், சுப்பிரமணி ஆகியோர் வருவாய் ஆய்வாளராகச் சென்னையில் தற்போது பணியாற்றி வருகிறார்கள்.
இவர்கள் இருவர் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. தொடர்ந்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
மோசடி வழக்கில் கைதான பிரமோத், சுப்பிரமணியிடமிருந்து 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான டூவிலர், தங்க மோதிரம், ரூ. 85,000 ஆகியவைப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவர்கள் இருவரும் சேர்ந்து 11 லட்சத்து 63 ஆயிரத்து 539 ரூபாய் வரை மோசடி செய்திருக்கிறார்கள். இதற்காக கலெக்டரின் கையெழுத்தைப் போலியாகப் போட்டதோடு போலி ரப்பர் ஸ்டாம்ப் ஆகியவற்றையும் பயன்படுத்தியிருக்கிறார்கள். அவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.
சென்னை கலெக்டரின் கையெழுத்தைப் போலியாகப் போட்டு மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

