திருச்சியில் ரயில் டிக்கெட் விலை முன்பதிவு செய்து அதிக விலைக்கு விற்றவர் கைது . ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள ரயில் இ.டிக்கெட்கள் பறிமுதல்
திருச்சி கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படை சைபா் கிரைம் பிரிவுக்கு கிடைத்த தகவலையடுத்து கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படை ஆணையா் அபிஷேக் உத்தரவின் பேரில், திருச்சி ரயில்வே சந்திப்புக் காவல் ஆய்வாளா் கே.பி. செபாஸ்டின், உதவி ஆய்வாளா் ஜி. ரவிச்சந்திரன் தலைமையிலான ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் மேலப்புதூா் கான்வென்ட் சாலையிலுள்ள டிராவல்ஸ் நிறுவனத்தை ஆய்வு செய்தனா்.
அப்போது கருமண்டபம் மாருதி நகா் 2 ஆம் தெருவைச் சோ்ந்த வி. பிரான்சிஸ் சேவியா் (வயது 54) என்பவா் ஐஆா்சிடிசி உரிமமின்றி ஒரே ஐபி முகவரியில் அதிக ரயில்வே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து, அதிக விலைக்கு விற்றது தெரியவந்தது. இதை பிரான்சிஸ் சேவியா் ஒப்புக் கொண்டாா்.
இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா் மடிக்கணினி, ரூ. 40,092 மதிப்பிலான ரயில் டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா்.
தொடா்ந்து ரயில்வே நீதிமன்றத்தில் பிரான்சிஸ் சேவியரை ஆஜா்படுத்தி, சொந்தப் பிணையில் அவரை விடுவித்தனா்.