
திருச்சியில் ஓடும் பஸ்ஸில் நகைப் பையை திருடிய
4 பேர் கைது : 23 பவுன் நகைகள் மீட்பு.
திருச்சியில் பேருந்திலிருந்து நகைப்பையை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 23 பவுன் நகைகளை மீட்டுள்ளனர்.
திருச்சி கோட்டை, சஞ்சீவிநகரைச் சேர்ந்தவர் சசிக்குமார். தனியார் நிறுவன விற்பனை மேலாளரான இவர் தனது குடும்பத்தினருடன் 23 பவுன் நகைகள் அடங்கிய பையுடன் (டிராவல் பேக்) பேருந்தில் பயணித்துள்ளார். கோட்டை பகுதியிலிருந்து மத்திய பேருந்து நிலையம் செல்லும் நகரப் (தனியார்) பேருந்தில் சென்றபோது, திடீரென பேருந்தில் வைக்கப்பட்டிருந்த பையை காணவில்லை. இது குறித்து அவர் உடனே பாலக்கரை போலீஸில் புகார் செய்தார். இது குறித்து தகவலறிந்த மாநகர காவல் ஆணையர் ந. காமினி, உடன் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அதன் பேரில் பாலக்கரை போலீசார் வழக்குப் பதிந்து பேருந்து நிறுத்தங்களில் உள்ள கண்காணிப்பு காமிராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் மர்ம நபர்கள் சிலர் பையுடன் செல்வது பதிவாகியிருந்தது. அதன் பேரில் போலீஸôர் மேற்கொண்ட விசாரணையில், ஸ்ரீரங்கம் அழகிரிபுரத்தை சேர்ந்த மு. அப்துல் அஜீஸ் என்கிற வெள்ளை ராஜா (வயது 42), தென்னூரைச் சேர்ந்த இ.சூசைராஜ் (34), சி. யாசர்அரபாத் (29), அரியமங்கலத்தைச் சேர்ந்த மு. சேக்தாவூது ஆகிய நால்வரும் திட்டமிட்டு பேருந்திலிருந்து பையை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் நேற்று அனைவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த நகைகளை மீட்டனர்.
சம்பவம் நடந்த இரு நாள்களில் குற்றவாளிகளை கைது செய்து நகையை மீட்ட போலீசாரை மாநகர காவல் ஆணையர் பாராட்டினார்.

