


பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் பொதுநலச்சங்கம் சார்பில் தமிழக முதல்வர், அமைச்சர், தலைமைச் செயலாளர் உள்ளிட்டோருக்கு மனுக்கள் அனுப்பி உள்ளனர்.

இது தொடர்பாக டாஸ்மாக் பணியாளர்கள் பொது நலச்சங்க திருச்சி மாவட்ட தலைவர் என். சரவணக்குமார், செயலாளர் எஸ். சத்தியமூர்த்தி, பொருளாளர் கே. ஜோசப்பிரிட்டோ ஆகியோர் அனுப்பியுள்ள கோரிக்கை மனுக்களில் கூறியிருப்பது:

கடந்த 2003 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளில் ரூ.50,000 காப்புத்தொûகை செலுத்திய பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மாதம் ரூ. 2,000 தொகுப்பூதியத்தில் மேற்பார்வையாளர் பணி வழங்கப்பட்டது.

ரூ. 15 ஆயிரம் காப்புத்தொகை செலுத்திய 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.1,000 தொகுப்பூதியத்தில் விற்பனையாளர் பணியும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 19 ஆண்டுகளாக பல்வேறு இன்னல்களுக்கு இடையே பணியாற்றி வரும் டாஸ்மாக் பணியாளர்களில் தற்போது, மேற்பார்வையாளருக்கு ரூ.14, 850, விற்பனையாளர்களுக்கு ரூ.11,340 என மாதாந்திர தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. நாங்கள் தினமும் 10 மணி நேரம் ஓய்வின்றி பணியாற்றி வருகிறோம். தொகுப்பூதியத்தில் பணியாற்றும் எங்களுக்கு இதுவரை பணி பாதுகாப்பு, நிரந்தர வேலை எதுவும் வழங்கப்பட வில்லை.
‘
மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் எங்களுக்கு இன்னும் ஓய்வு பெறும் வயது 58 ஆகவே நீடிக்கிறது. தற்போது வழங்கப்படும் தொகுப்பூதியத்தை கொண்டு எங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியாத நிலை உள்ளது. வங்கிகளிலும் கடன் கொடுக்க மறுக்கின்றனர்.
எனவே எங்களுக்கு டாஸ்மாக் நிறுவனத்தில் சிறப்பு காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அல்லது அரசு துறையிலோ நிரந்த பணி வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

