
திருச்சி:
மின்சாரம் தாக்கி கேபிள் டி.வி. ஆபரேட்டர் பலி.
திருச்சி பாலக்கரை கான்யான் மேட்டு தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 31). கேபிள் டிவி ஆபரேட்டர். இவர் தீரன் நகர் மயிலாடுபாறை பகுதியில் இளங்கோ என்பவரது வீட்டுக்கு கேபிள் இணைப்பு கொடுப்பதற்காக சென்றார்.
அவரது வீட்டின் மொட்டை மாடியில் கேபிள் டி.வி. இணைப்பு கொடுத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அந்த வழியாக செல்லும் உயர் மின்னழுத்த மின் கம்பியில் பட்டு மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜா சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்.
இதுகுறித்து அவரது தந்தை சுந்தர்ராஜன் சோமரசம்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

