திருச்சி விமான நிலையத்தில் உள்ளாடைக்குள் வைத்து ரூ.54 லட்சம் மதிப்புள்ள நகையை கடத்தி வந்த நபர் சிக்கினார்

சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வழியாக தங்கம் கடத்தி வந்ததாக, திருச்சியைச் சேர்ந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
அவரிடமிருந்து ரூ.53.72 லட்சம் மதிப்பிலான 43 பவுன் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சிங்கப்பூரில் இருந்து திங்கள்கிழமை அன்று அதிகாலை திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் வழக்கமான சோதனை நடத்தியபோது திருச்சியைச் சேர்ந்த அழகப்பன் சங்கரன் (வயது 58) என்பவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதைத் அடுத்து அவரை அதிகாரிகள் சோதனை செய்தனர்.அதில், அவர் தனது உள்ளாடைக்குள் 43 பவுன் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரிடமிருந்து “ரூ.46.24 லட்சம் மதிப்பிலான 36.5 பவுன் தங்கக் கட்டியும், மற்றும் ரூ.7.48 லட்சம் மதிப்பிலான 6.5 பவுன் தங்க வளையலும்” பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் “43 பவுன் (347 கிராம்) தங்கத்தின் மதிப்பு ரூ.53.72 லட்சம்” என தெரியவந்துள்ளது.தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அழகப்பன் சங்கரனை கைது செய்து, தங்கம் எங்கிருந்து பெறப்பட்டது,
யாருக்காக கடத்தி வரப்பட்டது என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

