திருச்சியில் நீர்மோர் பந்தல்களை திறந்து வைத்தார் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி.கோடை காலம் முடியும் வரை பொதுமக்களுக்குத் தங்குதடையின்றி குடிநீர் மற்றும் நீர்மோர் வழங்கத் திட்டம்.
திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தண்ணீர் பந்தல்களை திறந்து வைத்தார்.

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களின் தாகத்தைத் தணிக்க திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் பல்வேறு இடங்களில் தண்ணீர் பந்தல்கள் திறக்கப்பட்டுள்ளன.
திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் பால்பண்ணை பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தல்களை இன்று திறந்து வைத்தார்.
சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் திருச்சி திமுக மாவட்டம் சார்பில் பொதுமக்களுக்கு நீர்மோர், இளநீர் மற்றும் தர்பூசணி உள்ளிட்டவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இதேபோன்று பால்பண்ணை பேருந்து நிறுத்தம் அருகில் மாநகர திமுக சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை அமைச்சர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்.

இந்த நிகழ்வுகளில் மாநகர செயலாளர் மு. மதிவாணன், திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் வண்ணை அரங்கநாதன் பகுதி செயலாளர்கள் மோகன், விஜயக்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும், திமுக நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கோடை காலம் முடியும் வரை இந்தப் பந்தல்கள் மூலம் பொதுமக்களுக்குத் தங்குதடையின்றி குடிநீர் மற்றும் நீர்மோர் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

