திருச்சி காட்டுப்புத்தூர் அருகே திருட்டு மணல் கடத்திய லாரி பறிமுதல் டிரைவர் தப்பியோட்டம்.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே காட்டுப்புத்தூர் பகுதியில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுவதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து, திருச்சி நிலவியல் மற்றும் சுரங்கத் துறை சிறப்பு வருவாய் ஆய்வாளர் ராமர் தலைமையிலான குழுவினர் நேற்று காலை காட்டுப்புத்தூர் – எம்.புதூர் கால்நடை மருத்துவமனை அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த இஷர் ரக லாரியை தடுத்து நிறுத்த முயன்றனர். அதிகாரிகளைக் கண்டதும் லாரியை ஓட்டி வந்த நபர், வாகனத்தை சாலையிலேயே நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
இதையடுத்து அதிகாரிகள் அந்த லாரியை சோதனை செய்தபோது, அதில் சுமார் 3 யூனிட் மணல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. மணலுடன் கூடிய லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இது குறித்து ஆய்வாளர் ராமர் அளித்த புகாரின் பேரில், காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய லாரி டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

