தமிழகத்தில் வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்க எம்எல்ஏ இனிக்கோ இருதயராஜ் சட்டமன்றத்தில் வலியுறுத்தல் .
வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்றும், தமிழில் பெயர் வைக்காத வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதிலளித்து பேசிய தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் சாமிநாதன்,
வணிக வளாகங்களில் தமிழில் பெயர் பலகை இல்லாமல் இருந்தால் நடவடிக்கைகள் எடுக்கப்படுவது தொழிலாளர் நலத்துறை தான் என்றும், இதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக கூறினார். மேலும், 500 ரூபாய் அபராதம் இருந்தது தற்போது 2 ஆயிரமாக அபராதம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறிய அவர்,

தமிழில் பெயர் பலகை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட படிப்படியாக தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூறினார்.
இதே போல திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலன் மூடநம்பிக்கையை ஒழிக்க தமிழக அரசு தனிச்சட்டம் கொண்டு வரப்படுமா ? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஒருவருக்கு நம்பிக்கையாக இருப்பது மற்றொருவருக்கு மூடநம்பிக்கையாக இருக்கிறது என்றும்,
அவரவர் உரிமையில் தலையிடுவது சரியாக இருக்காது என கூறினார். மேலும், நம்முடைய கொள்கைகளை பின்பற்றலாம் அதற்காக மற்றவர்களின் மத நம்பிக்கையில் தலையிடுவது சரியாக இருக்குமா என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் திருச்சிராப்பள்ளி பாலக்கரை பிரபாத் திரையரங்கம் ரவுண்டானா அருகில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நிறுவப்பட்ட சிலையை திறக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா என சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சுவாமிநாதன், பாலக்கரை பிரபாத் திரையரங்கம் அருகில் ஏற்கனவே சிவாஜி கணேசனுக்கு சிலை நிறுவப்பட்டுள்ளதாகும்.ஆனால் பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளது என்றும் அதற்கான காரணம் உச்சநீதிமன்ற தீர்ப்பு தான் எனவும் கூறினார். பொது இடத்தில் சிலை இருப்பதால் அதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறிய அவர், மாநகராட்சி நிர்வாகத்துடன் கலந்து பேசி, சிவாஜி கணேசன் சிலை மக்கள் பார்க்கும் இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு விரைவில் திறக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும் தெரிவித்தார்