திருச்சி பாராளுமன்ற தொகுதி தேர்தலில் 14 ,796 வாக்குகள் பெற்ற சுயேச்சை வேட்பாளர் . சின்னம் குழப்பம் காரணமா?
திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் கடந்த 4-ந் தேதி நடைபெற்றது.
ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய முதல் சுற்றிலேயே ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ முன்னிலை பெற்றார். 2-வது இடத்துக்கு அதிமுகவும், மூன்றாவது இடத்துக்கு நாம் தமிழர் கட்சியும், நான்காவது இடத்திற்கு பாஜக கூட்டணியில் போட்டியிட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் ஓட்டுகள் பெற்று வந்தது.
இதில் பிரதான அரசியல் கட்சி வேட்பாளர்கள் உட்பட 35 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.
அதில் சுயேட்சைகளில் செல்வராஜ் என்பவர் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வந்தார். காரணம்,
ஒவ்வொரு சுற்றிலும் அவர் 700க்கும் அதிகமான வாக்குகளை பெற்றார்.
சுயேட்சை வேட்பாளர்களில் பத்மஸ்ரீ விருது பெற்ற தாமோதரன் உள்ளிட்ட சில முக்கிய சுயேட்சை வேட்பாளர்களும் இருந்தனர். ஆனால் செல்வராஜ் மட்டும் கூடுதலான வாக்குகள் பெற்று வந்தது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.
இவருக்கு மட்டும் மக்கள் மத்தியில் இத்தனை செல்வாக்கா? என குழம்பி போயினர்
தேர்தலில் எந்தப் பிரச்சாரமும் செய்யாமல் 14 ஆயிரத்து 796 வாக்குகள் என். செல்வராஜ் பெற்றார்.
குறைந்தபட்சம் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 1,788 வாக்குகளும், அதிகபட்சமாக கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 3,279 வாக்குகளும் பெற்றிருந்தார்.
இறுதியில் செல்வராஜுக்கு 5-வது இடம் கிடைத்தது. வெற்றி வேட்பாளர்
துரை வைகோ பெயரை ஒத்த பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் துரை,
அதிமுக வேட்பாளர் கருப்பையா பெயரைக் கொண்ட இன்னொரு சுயேட்சை வேட்பாளரும் குறைந்த வாக்குகளை பெற்றிருந்தனர்.
மாறாக செல்வராஜ் அதிக வாக்குகள் பெற்றது அவருக்கு இன்ப அதிர்ச்சியை தந்தது.
இவருக்கு தேர்தல் ஆணையம் பிஸ்கட் சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது.
மதிமுக சார்பில் போட்டியிட்ட துரை வைகோவுக்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டது.
2 சின்னமும் செவ்வக வடிவில் இருந்தன. தீக்குச்சி தவிர்த்து பார்த்தால் ஒரே மாதிரியாக இருக்கும். ஆகவே இந்த சின்னம் குழப்பத்தில் அவருக்கு கூடுதல் வாக்கு கிடைத்திருக்கலாம் என மதிமுக வின் வாக்கு எண்ணிக்கை முகவர் ஒருவர் கூறினார்.
சுயேச்சை வேட்பாளர்களில் அதிக வாக்குகள் பெற்ற செல்வராஜ் ஒரு நிதி நிறுவன ஊழியர்.
இவர் வேட்பு மனு தாக்கல் செய்ததை தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே பகிர்ந்தார். தேர்தல் பரப்புரை மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.