மக்கள் நலனுக்காக போராடியவர்கள் மீது வழக்குப்பதிவது வினோதத்திலும் வினோதம் . திருச்சி அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்.
திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளரும் 47 வது வார்டு கவுன்சிலருமான செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாக :-
ஆளுங்கட்சி அண்டர்ஸ்டாண்டிங், அட்டைக்கத்தி எதிர்க்கட்சிகள்.
தமிழகத்தின் எதிர்கால சந்ததியினரை சீரழிக்கும் போதை மாஃபியாக்களை எதிர்த்து
சில தினங்களுக்கு முன்னர், திருச்சியில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் TTV தினகரன் அவர்களின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்ட இக்கண்டன ஆர்ப்பாட்டத்தினால், பலவகையிலும் இடையூறுகள் ஏற்பட்டது என்று ஏற்கனவே அமமுக நிர்வாகிகள் 1250 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருச்சி மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் ப.செந்தில்நாதன், மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ராஜா ராமநாதன், கல்நாயக் சதீஷ், வெங்கட்ரமணி, பன்னீர்செல்வம், தருண், நாகூர் மீரான், கல்லணை குணா போன்றோர் மீது மீண்டும் திருச்சியில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் எதிர்க்கட்சி என்று கூறிக்கொள்ளும் ஒரு கட்சி, அதே இடத்தில் ஆர்ப்பாட்டத்தை நடத்திய பொழுது அவர்கள் மீது காவல்துறையோ அரசு அதிகாரங்களோ எந்த வகையிலும் அழுத்தங்களோ இடையூறுகளோ கொடுக்கவில்லை. அவர்கள் மீது எந்த வழக்கும் பதியவில்லை. இன்னும் சொல்லப்போனால் எதிர்க்கட்சி நபர்களால் நடத்தப்படுகின்ற மதுபான பார்களில் எந்நேரமும் மதுக்கள் தடையின்றி கிடைக்கப் பெறுகின்றன.
இதன் மூலம் திருச்சியில் சட்டமன்ற எண்ணிக்கைப்படி அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி மற்றும் எதிர்க்கட்சி நிர்வாகிகள், ஆளுங்கட்சி நபர்களால் வழிநடத்தப்படுகிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகிறது
இளைஞர்களை சீர்குலைக்கும் போதை விற்பன்னர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி போராட்டம் நடத்தினால், போராடியவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதென்பது வினோதத்திலும் வினோதம் எனக் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.