தியாகத் தலைவி சின்னம்மா பேரவையை கலைத்துவிட்டு அதிமுகவில் இணைந்தவர், தற்போது தான் சசிகலா துரோகி என தெரிந்தது என்று கூறி உள்ளனர் .
சசிகலாவின் கணவர் மறைந்த ம.நடராஜனின் தீவிர ஆதரவாளரான பொன்.ஆனந்த் என்பவர், கடந்த சில வருடங்களுக்கு முன் தியாகத் தலைவி சின்னம்மா பேரவை என்ற அமைப்பைத் தொடங்கியிருந்தார். அதற்கு மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலையானபோது தியாகத் தலைவி சின்னம்மா பேரவை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது தான் இந்த இயக்கம் செய்த செயலாக பார்க்கப்பட்டது. சசிகலா ஆக்டிவ் அரசியலுக்கு வருவார், அதன் மூலம் பதவிகளைப் பெறலாம் என இதன் நிர்வாகிகள் காத்திருந்த நிலையில் அவர் அதிகாரம் இல்லாமல் ஒடுங்கிப் போனார். அதனால் இந்த இயக்கமும் அடங்கிப் போனது.
இந்த நிலையில் இப்போதுதான் சசிகலா துரோகி என உணர்ந்துள்ளதாக தெரிவித்துள்ள பொன். ஆனந்த், அதிமுகவை காப்பாற்ற ஒப்பற்ற தலைவராக இபிஎஸ் மட்டுமே இருப்பதாகவும், அதனால் தியாகத்தலைவி சின்னம்மா பேரவையை கலைத்துவிட்டு இபிஎஸ் தலைமையில் அதிமுகவில் இணைந்து விட்டதாகவும் தற்போது அறிவித்துள்ளார்.
இனி எடப்பாடி பழனிசாமியின் கரத்தை வலுப்படுத்த அதிமுகவில் தீவிரமாக உழைக்கப் போவதாகவும், தமிழ்நாடு முழுவதும் உள்ள தனது தியாகத் தலைவி சின்னம்மா பேரவை நிர்வாகிகள் அனைவரும் அதிமுகவில் இணைந்துள்ளதாகவும் அவர்கள் மூலம் அதிமுகவை வலுப்படுத்த எடப்பாடி பழனிசாமிக்கு உறுதுணையாக இருக்கப் போவதாகவும் பொன்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.