திருச்சி டிவிஎஸ் டோல்கேடில் உயிர்ப்பலி ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட கடைகளை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியே திறந்து வைக்கலாமா? பொதுமக்கள் கவலை
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பஸ் நிறுத்தத்தில் எஸ்இடிசி போக்குவரத்து டெப்போவிற்கு சொந்தமான இடத்தில் 15 கடைகள் கட்டப்பட்டது.
இந்தக் கடைகள் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரின் சென்னையை சேர்ந்த நண்பர் அவர்களால் டெண்டர் எடுக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது .
கடைகளுக்கு செல்ல, வாகனங்கள் நிறுத்த என எந்த வசதியும் இல்லாத இடத்தில் கடைகள் அமைந்துள்ளதாக கூறி இதற்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்ததை தொடர்ந்து கடந்த ஒரு ஆண்டுகளாக அந்தப் பெட்டிகள் திறக்கப்படாமல் இருந்தது .
இது 47வது வார்டில் அமைந்துள்ளது . இதன் வார்டு கவுன்சிலர் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தனது கடும் கண்டனத்தை தெரிவித்தும் மாநகராட்சி அதிகாரி மூலம் கடைகள் திறக்க கூடாது என நோட்டீஸ் அனுப்பியும் வைத்தார்.
இந்த கடைகளுக்கு வரும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் நெடுஞ்சாலையில் தான் நிறுத்த வேண்டும் .

மத்திய பேருந்து நிலையம், சத்திரம் ஆகிய பகுதியில் இருந்து வரும் இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் , கனரக வாகனங்கள் டோல்கேட்டில் பொன்மலை , புதுக்கோட்டை செல்வதற்கு திரும்பும் போது இப்பகுதியில் சாலையில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களால் கண்டிப்பாக உயிர்ப்பலி ஏற்படும். இதனால்தான் இந்த கடைகளை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்
இன்று அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தனது பொற்கரங்களால் திறந்து வைத்துள்ளார்.
சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து வருவது அமைச்சருக்கு தெரியுமா என்பது தெரியவில்லை .
இது குறித்து கவுன்சிலர் செந்தில்நாதன் கூறுகையில் இந்தப் பகுதியில் திறந்து உள்ள மற்றும் திறக்கப்பட உள்ள கடைகளால் விபத்து மற்றும் உயிர் பலி ஏற்பட்டால் அதற்கு போக்குவரத்து துறையினர், மாநகராட்சி அதிகாரிகள், மேலும் இந்த கடைகளை திறக்க காரணமாக இருந்த அனைவரும் தான் பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறினார்.