வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகம் பாடுபடும் என அதன் நிறுவனத் தலைவர் இடிமுரசு இஸ்மாயில் கூறியுள்ளார் .
குடியுரிமை சட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று கூறிய
முதல்வருக்கு முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக நிறுவன தலைவர் இடிமுரசு இஸ்மாயில் நன்றி.
முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் ஆட்சிக்கு வந்த நாள் முதல் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்க்கொண்டுவருகிறது பாஜகவின் மோடி அரசு.அந்த வகையில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியது.
2020 ஆண்டு ஜனவரி 1-ந் தேதி இச்சட்டம் அமலுக்கு வரும் என்று திட்டமிட்டிருந்த நிலையில் விதிமுறைகள் வகுக்கப்படாத காரணத்தால் நடைமுறைபடுத்தப் படவில்லை. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் சாந்தனு தாக்கூர் குடியுரிமை திருத்தச் சட்டம் ஒருவாரத்திற்க்குள் மேற்குவங்கம் உட்பட இந்தியா முழுவதும் அமல்படுத்தப்படும் என்று பேசியுள்ளார். இதை முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.
மத்திய அமைச்சரின் இந்த பேச்சுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இலங்கை தமிழருக்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிரான குடியுரிமை சட்டத்தை திமுக அரசு ஒருபோதும் தமிழகத்தில் அனுமதிக்காது என்று உறுதியாக குறிபிட்டுள்ளதை முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகத்தின் சார்பில் வரவேற்கிறேன். பாராட்டுகிறேன். நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழகத்தில் ஆட்சி பொருப்பேற்றது முதல் இஸ்லாமிய கிறிஸ்தவ சமுதாயம் உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கி நாடு போற்றும் நல்லாட்சியை புகழ்மிக்க பொற்கால ஆட்சியை நடத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்திட எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 40 தொகுதிகளின் வெற்றிக்கு முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகம் பாடுபடும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.