Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தெய்வமான சுமை தாங்கிக்கல். வரலாற்று நிகழ்வை விளக்கும் திருச்சி யோகா விஜயகுமார்.

0

'- Advertisement -

 

தெய்வமான சுமைதாங்கிக் கல் கதை!

வரலாற்றை தேடி ஒரு அடி!

வரலாற்றை தேடி ஒரு அடி நிகழ்விற்காக அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், முஹமது சுபேர், தினகரன் சந்திரசேகரன் உள்ளிட்டோர் பயணம் மேற்கொண்டனர்.

பயணத்தில் கண்ட சுமைதாங்கி கல் குறித்து யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில்
சுமைதாங்கி கல் இன்றைக்கும் கிராமங்களில் பார்க்கலாம். சுமைதாங்கிக் கல்லை வைப்பதற்கு காரணம் அந்த வழியாகச் செல்லும் வழிப்போக்கர்கள், அந்த ஊருக்கு வருபவர்கள் தாங்கள் கொண்டுவரும் சுமையை இறக்கிவைக்கவும், சற்று இளைப்பாறவும் அமைக்கப்பட்டவை.
தற்காலத்தில், சுமைதாங்கிகள் பெரும்பாலான பகுதிகளில் மறக்கப்பட்ட ஒரு காலகட்டத்தின் எச்சங்களாகவே இருக்கின்றன.

Suresh

வசதிகள் நிறைந்த இன்றைய காலகட்டத்தில், சுமைதாங்கிகள் தேவையற்றவை ஆகிவிட்டன. எனினும் சில ஆண்டுகளுக்கு முன்புவரை இவற்றுக்கான தேவை இருந்தது. இதனால், முக்கியமான இடங்களில் சுமைதாங்கிகளை அமைப்பது அறச் செயலாகக் கருதப்பட்டது. அதுமட்டுமின்றி சுமைதாங்கி கல் பின்பு கடந்த கால நிகழ்வுகள் உள்ளன.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூராட்சி ஆடுதுறை பெருமாள் கோவில் செல்லும் பிரதான சாலை கிராம எல்லையில் ஒரு சுமைதாங்கி கல்லுக்கு மஞ்சள் நிற புடவை கட்டியும் சிவப்பு பச்சை கலர் வளையலும் நூலில் கட்டி தரையில் அகல் விளக்கு ஏற்றி வழிபாடும் செய்து உள்ளனர். அந்தச் சுமைதாங்கி கல் ஒரு பெண்ணின் நினைவாக வைக்கப்பட்டது என்பதை உணர்த்துவதுபோல் சுமைதாங்கியின் பக்கவாட்டில் இருக்கும் நீண்ட, நெடிதுயர்ந்த கல்லில் பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டின் பல இடங்களில் சுமைதாங்கி கல் எத்தனையோ இருக்கின்றன. ஆனால், பெயர் எழுதும் பழக்கம் இங்கு உள்ளதை புரிந்து கொள்ள முடிகிறது மூதாட்டி ஓருவரிடம் விசாரித்ததில், பெண்ணின் நினைவாக சுமைதாங்கியை வைத்திருக்கிறார்கள்.
பொதுவாக சுமைதாங்கி கல் அமைப்பது என்பது நிறைமாத கர்ப்பிணியாக இறந்திருப்பார்கள். இறந்தவுடனேயே சொந்தக்காரங்க எல்லாம் சேர்ந்து சுமைதாங்கிக் கல்லைவெக்கணும்னு முடிவு பண்ணி சாலை ஓரமாக கிராம எல்லையில் வைத்து வழிபட ஆரம்பித்து விடுவார்கள்.வெறும் சுமைதாங்கிக் கல்லா பார்க்காமல் கல்லுகிட்ட வந்து நின்னு மனசுல வேண்டி தேங்காய், பழம் வெச்சு சுமைதாங்கிக் கல்லை தெய்வமாக வணங்குகின்றனர். தை மாதம், மாட்டுப் பொங்கல் அன்று சேலை, காதோலை கருகமணி, வளையல், மல்லிகைப்பூ, எலுமிச்சைப் பழம் எல்லாம் வைத்து, கிடா அல்லது கோழியை அறுத்து பொங்கல் விழா எடுக்கிறார்கள்.

இந்தச் சுமைதாங்கிக் கல் பெண்களுக்காக உருவாக்கப்பட்ட வடிவம் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. சுமைதாங்கிகளை அமைப்பதில் உள்ள குறியீட்டு அம்சம் கருக்கொண்ட பெண்ணொருத்தி குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இறந்துவிட்டால் அவளுக்காகப் பொது இடங்களில் சுமைதாங்கி அமைப்பது வழக்கமாக உள்ளது.

இது சுமைதாங்கி போடுதல் எனப்பட்டது. பிறரது சுமைத் துன்பத்தைப் போக்குவதன் மூலம் அவளுக்கு வயிற்றுச் சுமையாலான துன்பம் இதனால் நீங்கும் என்பது நம்பிக்கை என்றார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.