திருச்சியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஓட்டல் ஊழியருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 7 ஆண்டு சிறை .
திருச்சியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள இருதயபுரம் மாதாகோவில் தெருவைச் சேர்ந்தவர் டே. ஜான்ஜோசப்
(வயது 48). உணவகத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 26.12. 2019 அன்று, அவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை பாலியல் ரீதியாக தொலை துன்புறுத்தியுள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், லால்குடி மகளிர் போலீஸார், போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து ஜான்ஜோசப்பை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, ஜான்ஜோசப்புக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 15 ஆயிரம் அபராதமும், கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து, நீதிபதி ஸ்ரீவத்ஸன் தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கவும் தீர்ப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜாகீர்உசேன் ஆஜரானார்.