திருச்சியிலும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்படும். நூலக வார விழாவில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி .
தேசிய நூலக வார நிறைவு விழா:
திருச்சியிலும் கருணாநிதி நூற்றாண்டு நூலகம்
அமைக்க நடவடிக்கை
அமைச்சர் அன்பில் மகேஸ்பொய்யாமொழி பேச்சு.
திருச்சியிலும், முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி நூற்றாண்டு நூலகம் அமைவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார்.
திருச்சி மாவட்ட பொது நூலகத்துறை மற்றும் வாசகர் வட்டம் சார்பில் 56-வது தேசிய நூலக வார நிறைவு விழா மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது. நூலக வார விழா தொடர்பான பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் மற்றும் வாசகர்களுக்கு பரிசுகளை வழங்கிஅமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாது:-
நூலகம் என்பது வாசகர்களும், எழுத்தாளர்களின் எழுத்துகளும் சங்கமிக்கும் இடம். இந்தியாவிலேயே பொது நூலகச் சட்டம் முதலில் இயற்றப்பட்ட பெருமைக்குரியது தமிழகம்தான். தமிழகத்தில் தற்போது 4,661 நூலகங்கள் உள்ள நிலையில், பொது நூலக இயக்ககம் 1972 ஆவது ஆண்டில் அப்போதைய முதல்வர் மு. கருணாநிதி ஆட்சியில் தொடங்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் நூலகத்துறைக்கு முக்கியத்துவம் அளித்து மேம்படுத்தப்பட்டு வருகிறது.
மதுரையைப் போன்று, திருச்சியிலும் மிகப்பெரிய கருணாநிதி நூற்றாண்டு நூலகம் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். கண்டிப்பாக, அது வெற்றிகரமாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. நூலகத்தில் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும்.
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார்.
விழாவில், நூலக மேம்பாட்டு பணிகள் மற்றும் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்ட பல்வேறு நபர்களுக்கு விருது மற்றும் கேடயங்களையும் அமைச்சர் வழங்கினார். முன்னதாக, மத்திய சிறை மேலாளர் திருமுருகன் எழுதிய “என்னுயிரே’ என்ற நூலையும் அமைச்சர் வெளியிட்டார். நிகழ்ச்சியில், கோட்டாட்சியர் பார்த்திபன், மாவட்ட நூலக அலுவலர் அ.பொ. சிவக்குமார், மண்டல குழுத்தலைவர் மு.மதிவாணன், வாசகர் வட்டத் தலைவர் வீ. கோவிந்தசாமி மற்றும் வாசகர்கள் கலந்து கொண்டனர்.