திருச்சி மாநகரில் உயிர்ப்பலி ஏற்படும் முன் சாலையோர பிரியாணி கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா ? அனைத்து கடைகளுக்கும் மேயர் அன்பழகன் பங்குதாரர் ?.
திருச்சியில் சாலையோர இரு பிரிவு டிபன் கடைக்காரர்களுக்கு
இடையில் மோதல்.
திருச்சி கண்டோன்மென்ட் தலைமை ஸ்டேட் வங்கிக்கு எதிரே ஏராளமான டிபன் கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பலர் மாநகராட்சியிடம் உரிய அனுமதி பெற்று மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டிருக்கும் பெட்டிகளை அமைத்து அவற்றில் டிபன் கடை நடத்தி வருகின்றனர். இதற்காக அவர்கள் மாநகராட்சிக்கு உரிய வாடகையும் அளித்து வருகின்றனர். இந்த கடைகள் கண்டோன்மென்ட் பகுதியில் மிக பிரபலமாக இயங்கி வருபவையாகும். இதன் காரணமாக இப்பகுதி இரவு நேரங்களில் உணவு அருந்த வருபவர்கள் மற்றும் அவர்களின் வாகனங்கள் நிறைந்து நெரிசல் மிகுந்த பகுதியாக காணப்படும். இரவு 12 மணிக்கும் மேலாகவும் இந்த கடைகளில் உணவுகள் கிடைக்கும் என்பதால் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இதனால் போக்குவரத்து நெரிசலுக்கும் பஞ்சமில்லை. இருப்பினும் இந்த பகுதி இரவு உணவு பிரியர்களின் முக்கிய ஸ்தலமானது. இப்பகுதியில் வியாபாரம் சூடி பிடித்து நடப்பதால் சமீப காலமாக இங்கு பலரும் வேன் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி அவற்றில் பிரியாணி, புரோட்டா உள்ளிட்ட உணவு வகைகளை விற்பது அதிகரித்தது. இதன் காரணமாக இப்பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது. போக்குவரத்து பாதிப்பை தவிர்க்கும் பொருட்டு போலீசாரின் நெருக்கடியும் இப்பகுதி டிபன் கடை நடத்துவோருக்கு ஏற்பட்டது. இது ஏற்கனவே அனுமதியுடன் டிபன் கடை நடத்தி வருபவர்களுக்கு பெரும் சோதனையானது. இதன் பொருட்டு ரெகுலர் ஓட்டல்களை நடத்துவோருக்கும், தற்காலிகமாக வாகனங்களில் கடை விரித்தோருக்கும் இடையில் சர்ச்சையை ஏற்படுத்தியது. நீண்ட நாட்களாக புகைந்து கொண்டிருந்த இந்த பிரச்சினை திங்கள் அன்று இரவு பூதாகரமாகியது.
ரெகுலர் டிபன் கடைக்காரர்களுக்கும், வாகன டிபன் கடைகாரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினை பெரிய மோதலாக உருவெடுக்கும் அபாயம் ஏற்பட்டது. இந்நிலையில் அங்கு வந்த போலீசார் இருதரப்பையும் சமாதானம் செய்தது. நாளை(நேற்று) காலை கண்டோன்மென்ட் போலீஸ் நிலையத்தில் நடக்கும் சமாதான பேச்சு வார்த்தையில் இருதரப்பினரும் கலந்து பேசி உரிய தீர்வு பெறலாம் என பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
நேற்று காலை காவல் நிலையத்தில் உங்களுக்குள் பேசி தீர்த்துக் கொள்ள என பேசி அனுப்பி வைத்தனர் .
மாநகராட்சி அனுமதியுடன் டிபன் கடை நடத்துபவர்கள் காய்கறி வெட்டுவது முதல் குழம்பு,சாப்பாடு பூரி தோசை ஆகியவற்றை அதே இடத்தில் சுகாதாரமான முறையில் தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.
ஆனால் தற்காலிக பிரியாணி கடைகளில் விற்பனையாகும் பிரியாணி எங்கு தயாரிகிறது ? சுகாதாரமான முறையில் தயாராகிறதா ? என்பது யாருக்கும் தெரியாது. உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ரமேஷ் பாபுவிடம் எடுத்துக்கூறி அவர் தலைமையில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வுக்கு வந்தபோது தற்காலிக பிரியாணி கடை உரிமையாளர்கள் மேயர் அன்பழகன் பேசுங்கள் என கூறி விடுவதால் உணவு பாதுகாப்பு துறையினரும் எதற்கு மேல் இடத்து வம்பு என சென்று விடுகின்றனர் . பிரியாணி சாப்பிட்ட குப்பைகளை அப்படியே போட்டுவிட்டு சென்று விடுகின்றனர் . இதனால் நாய்கள் ஆடு மாடுகள் அவற்றை கடித்து குதறி ரோடு முழுவதும் துர்நாற்றம் வீசும் நிலை ஏற்படுகிறது.
மேலும் திங்கள் அன்று இரவு இரு தரப்பினர் இடையே நடைபெற்ற வாக்குவாதத்தின் போது ஸ்டாண்டர்ட் பிரியாணி விற்பனை வாகனத்தின் உரிமையாளர் சங்கிலி இந்த வாகனத்திற்கு மேயர் ஒரு பங்குதாரர் அவருக்கு தினமும் ரூபாய் 20000 பங்கு தருகிறோம் முடிந்தால் அவரிடம் பேசிவிட்டு வரவும் என தெனாவட்டாக கூறியுள்ளார் .
இதனைத் தொடர்ந்து டிபன் கடை உரிமையாளர்களும் மேயரிடம் சென்று இப்படி உங்களுக்கு தினமும் இருபதாயிரம் தருகிறேன் என ஒருவர் பொது இடத்தில் கூறுகிறார் என கேட்டபோது இதனால் உங்களுக்கு என்ன பிரச்சனை ? அவனை ஓரமாக வண்டியை போட சொல்கிறேன் எனக்கூறி அத்துடன் அந்த விவாதத்தை முடித்துக் கொண்டார் .
இதுபோன்று திருச்சி மாநகரம் முழுவதும் உள்ள ரோட்டோர பிரியாணி கடைகளில் இருந்து தினந்தோறும் மேயருக்கு பெருந்தொகை போகிறது என கூறப்படுகிறது.
இதுகுறித்து திமுக கவுன்சிலர் ஒருவரிடம் கேட்டபோது அனைத்து பணிகளிலும் கமிஷன் வாங்கும் மேயர் பிரியாணி கடைகளும் கமிஷன், பங்கு லஞ்சம் போன்று பணம் வாங்குவது கேவலமான செயலாகும் என கூறினார் .
பெருகிவரும் இந்த சாலையோர பிரியாணி கடைகளால் மோதல் ஏற்பட்டோ? சுகாதார மற்றும் முறையில் தயாரித்த உணவை சாப்பிட்டோ ? சாப்பிடும் கும்பல் உள்ளே ஏதாவது வாகனம் புகுந்தோ உயிர் பலி ஏற்படும் முன் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியினர், காவல்துறையினர், மாவட்டம் மாநகராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எண்ணமாகும் .