Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

காந்தி மார்க்கெட் அருகே இபி ரோட்டில் மேலும் ஒரு மதுபான கடை திறக்க முடிவு.பொதுமக்கள் எதிர்ப்பு. நடவடிக்கை எடுப்பாரா திருச்சி மாவட்ட கலெக்டர்.

0

 

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே இபி ரோட்டில் புதிதாக மேலும் ஒரு மதுபான கடையை திறக்க டாஸ்மாக் நிர்வாக முடிவுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திருச்சி காந்தி மார்க்கெட் பின்புறம், வாழைக்காய் மண்டி அருகே ஏற்கனவே டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த மதுபான கடையில் இருந்து சுமார் 50 மீட்டருக்கும் குறைவான தூரத்தில் இ.பி. ரோடு, இளங்கன் மாரியம்மன் கோவில் சாலை, யானை கட்டி மேட்டு தெருவில் புதிய மதுபான கடையை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. புதிய கடை திறக்க கட்டட உரிமையாளரிடம் வாடகை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தப் பகுதி குடியிருப்புகள் நிறைந்த பகுதி ஆகும். அதோடு போக்குவரத்து நெருக்கடி மிகுந்த பகுதியாகும்.

தற்போது புதிதாக மதுபான கடை திறக்கப்பட்டுள்ள முடிவு செய்துள்ள பகுதிக்கு அருகே கோவில் உள்ளது. வியாபார ஸ்தலங்களும் நிறைந்த பகுதி என்பதால் பொதுமக்கள், வியாபாரிகள், மாணவ, மாணவிகள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும்.

இந்நிலையில் புதிதாக் அந்தப் பகுதியில் மேலும் ஒரு மதுபான கடை திறப்பதால் போக்குவரத்து நெருக்கடி மேலும் அதிகரித்து விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.

அதனால் இந்த பகுதியில் புதிதாக 2வது மதுபான கடையை திறக்கக் கூடாது என்று அப்பகுதி பொதுமக்களும், வியாபாரிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். புதிய கடை திறக்க உள்ள பகுதியில் பொது குடிநீர் குழாய் அமைந்துள்ளது. பெண்கள் அதிக அளவில் இந்த குழாயில் தண்ணீர் பிடித்து செல்வார்கள். தற்போது இதன் அருகே மதுபான கடை திறக்கப்பட்டால் பெண்கள் குடிநீர் குழாய்க்கு தண்ணீர் பிடிக்க வர முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இந்தப் பகுதி மாநகராட்சி கவுன்சிலர் எல்ஐசி சங்கர் தலைமையில் 20க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புதிய மதுபான கடையை திறக்க கூடாது. திறந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். விபத்துக்கள் மேலும் அதிகரிக்கும் என்று புகார் அளித்துள்ளனர். புகாரை பெற்றுக் கொண்ட ஆய்வாளர் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். எதிர்ப்பையும் மீறி டாஸ்மாக் நிர்வாகம் மதுபான கடையை திறந்தால் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

அதனால் திருச்சி மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு புதிய மதுபான கடை திறக்கும் முடிவை கைவிட செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதே கோரிக்கையை பாரதிய ஜனதா கட்சியும் தெரிவித்துள்ளது. அந்த பகுதியில் புதிதாக மதுபான கடையை திறந்தால் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று பாரதிய ஜனதா கட்சி திருச்சி மாநகர் மாவட்ட பொதுச் செயலாளர் காளீஸ்வரன் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்ட வளர்ச்சியில் மாவட்ட நிர்வாகமும், அமைச்சர்களும் கவனம் செலுத்த வேண்டும். அதை விடுத்து டாஸ்மாக் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் புதிது புதிதாக மதுபான கடைகளை திறப்பதை ஏற்க முடியாது என்று பாரதிய ஜனதா கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.