அரசியல் கட்சியினர் போல் இந்து அமைப்பினர் ஜாதி பேதத்தை தூண்டுவதில்லை திருச்சியில் இந்து முன்னணி பொதுச் செயலாளர் முருகானந்தம் பேட்டி.
திருச்சியில் ”தமிழக முதல்வராக இருக்கும் ஸ்டாலின் கண்டிப்பாக விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொல்லி இருக்க வேண்டும் ” என்று ஹிந்து முன்னணி பொதுச் செயலாளர் முருகானந்தம் தெரிவித்தார்.
பெரம்பலூர் மாவட்டம் வி.களத்துாரில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் பிரதிஷ்டை செய்ய முயன்ற போது பெண்கள் மற்றும் ஆண்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தி காயப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில் திருச்சி மேலப்புதுார் பகுதியில் நேற்று விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்த ஹிந்து முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஹிந்துக்களுக்கு ஹிந்து மதம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஹிந்து தர்ம கருத்துக்களை எடுத்து கூறவும் விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்கள் நடத்தப்படுகிறது. இந்த ஆட்சியில் கோவில்களில் ஹிந்து தர்மங்களை எடுத்துக் கூறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.ஹிந்து தர்மத்தை முன்னெடுப்பவர்கள் ஜாதியைப் பற்றி பேசுவதில்லை; அவர்கள் தான் ஓட்டுக்காக ஜாதி பேதங்களை பேசி பிரிவினையை உருவாக்குகின்றனர். மக்களின் ஒற்றுமையை சீர்குலைகின்றனர். அரசியல் கட்சியினர் போல் ஹிந்து அமைப்பினர் யாரும் ஜாதி பேதத்தை துாண்டுவதில்லை.தமிழகம் முழுவதும் எந்த விதமான பிரச்னையும் இல்லாமல் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட மிகுந்த ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.
ஆனால் அரியலுார் பெரம்பலுார் மாவட்டங்களில் மட்டும் மாற்று மதத்தினர் அதிகம் உள்ளனர் எனக் கூறி எந்த இடத்திலும் சிலை பிரதிஷ்டை செய்ய விடாமல் போலீசார் தடுக்கின்றனர்.வி.களத்துாரில் பெண்களை அடித்து துன்புறுத்தி அநியாயம் செய்துள்ளனர்.
உயர் போலீஸ் அதிகாரிகள் தலையிட்டு போலீஸ் அட்டகாசத்திற்கு தீர்வு காண வேண்டும். இல்லாவிட்டால் மற்ற இடங்களில் பிரதிஷ்டை செய்த சிலைகளை எடுக்க மாட்டோம்.
சனாதனமும் இந்து மதமும் ஒன்றுதான்.ஆனால் சில கட்சிகள் அது வேறு இது வேறு என பொய் பிரச்சாரம் செய்கிறார்கள்.
தேர்தல் நேரத்தில் அனைத்து மதத்தினரும் ஒன்று என்று பேசி ஓட்டு சேகரிக்கும் தி.மு.க. தலைவர் தமிழக முதல்வரான ஸ்டாலின் ஹிந்து மக்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொல்லவில்லை. தி.மு.க.
தலைவராக இருக்கும் ஸ்டாலின் வாழ்த்து சொல்ல வேண்டியதில்லை. தமிழக முதல்வராக இருக்கும் ஸ்டாலின் கண்டிப்பாக வாழ்த்து சொல்லி இருக்க வேண்டும். கேரளாவில் கொண்டாடப்படும் ஓனம் பண்டிகைக்கு வாழ்த்து சொல்பவர் விநாயகர் சதுர்த்திக்கு ஏன் சொல்.லவில்லை.
இது போன்ற செயல்களால் ஹிந்து மதத்தை அழிக்க முயற்சிப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பேட்டியின் போது மாவட்ட பொதுச் செயலாளர் மனோஜ் குமார், மாவட்ட செயலாளர் சுரேஷ்,
அரியமங்கலம் பகுதி பொறுப்பாளர் மாரி, கௌரி சங்கர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.