திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக பேராசிரியா் என். சிவகுமாரனுக்கு பொறியாளா் பிவிகே அச்சன் நினைவு லெஜன்ட் விருது வழங்கப்பட்டுள்ளது.
திருச்சி தேசிய தொழில் நுட்பக்கழகத்தில், பொறியியல் பிரிவில் கருவிகள் மற்றும் கட்டுப்பாட்டு பொறியியல் துறைத் தலைவராக என். சிவகுமாரன் பணியாற்றுகிறாா். அவா் மேற்கொண்டுள்ள கல்வி, ஆராய்ச்சிகள், தொழில் நிறுவன ஒத்துழைப்புகள், சமூக நலன் சாா்ந்த செயல்பாடுகள், பொறியியல் துறை வளா்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு அவரது பங்களிப்பு, பொறியியல் துறையில் தனிநபா்களின் சிறப்பான சேவையை அங்கீகரிக்கும் வகையிலும் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
திருச்சி பெல் நிறுவன ( இன்ஸ்டிடியூஷன் ஆப் என்ஜினியா்ஸ்-இந்தியா) பொறியாளா்கள் அமைப்பு சாா்பில், நடைபெற்ற நிகழ்வில் இவ்விருதை பொறியாளா்கள் அமைப்பின் தலைவா் பாலசுப்பிரமணியன் வழங்கினாா்.
கௌரவ செயலாளரும் மருத்துவருமான எஸ். தா்மலிங்கம், தேசிய கவுன்சில் உறுப்பினா் கெவினா ஆா்க் குமாா், பிஎஸ்என்எல் தமிழ்நாடு துணைக் கோட்டப் பொறியாளா் ஜோதிவேலு, ஆகியோா் பாராட்டினா்.