திருச்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் பத்திரிகையாளர்களை ஓருமையில் பேசி வெளியே போக சொன்ன மேயர்.திமுக கவுன்சிலர் வெளிநடப்பு.
திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் மேயரை கண்டித்து தி.மு.க. கவுன்சிலர் வெளிநடப்பு.
திருச்சி மாநகராட்சி கவுன்சிலர்கள் சாதாரண கூட்டம் நடைபெற்றது. தி.மு.க.,வைச் சேர்ந்த மேயர் அன்பழகன் தலைமையில் நடந்த கூட்டத்தில், கமிஷனர் வைத்தியநாதன், கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கூட்ட அரங்கில், கட்சிகளின் கவுன்சிலர்கள் எண்ணிக்கை அடிப்படையில் உட்காருமிடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கூட்டம் துவங்கியதும், விடுதலை சிறுத்தை கட்சியின் கவுன்சிலர் பிரபாகரன், காங்., கவுன்சிலரும், முன்னாள் மேயருமான சுஜாதா மற்றும் அ.ம.மு.க., கவுன்சிலர் செந்தில்நாதன் ஆகியோர், தங்களுக்கு கடைசியில் இடம் ஒதுக்கப்பட்டதற்கு கடும் அதிருப்தி தெரிவித்தனர்.
அவர்களை, மேயரும், காங்., கவுன்சிலர்களும் சமாதானப்படுத்தினர். அவர்கள் சமாதானம் அடையாமல் தொடர்ந்து சத்தமாக பேசிக் கொண்டிருந்ததால், கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை படம் பிடித்த பத்திரிக்கை புகைப்பட கலைஞர்களை வெளியே போங்கய்யா என்று ஒருமையில் திட்டி விரட்டினார் மேயர்.
பின், கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் வாசிக்கும் போது, 60வது தீர்மானம் குறித்து, தி.மு.க., கவுன்சிலர் காஜாமலை சந்தேகங்கள் கேட்டு, பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது குறுக்கிட்ட மேயர் அன்பழகன், சீக்கிரம் முடிப்பா என்று கூற, இதனால் ஆத்திரம் அடைந்த காஜாமலை விஜய், இதற்கு நான் கூட்டத்துக்கு வரவேண்டியதே இல்லையே, நான் சொல்வதை கூட கேட்க நேரம் இல்லையா என்று கூறி, கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். அவரை மற்றவர்கள் சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் அதையெல்லாம் மீறி, கூட்ட அரங்கில் இருந்து வெளியே சென்று விட்டார். இதனால் கூட்டம் உடனடியாக முடிக்கப்பட்டது.