தமிழக இந்து அறநிலைத்துறைஅமைச்சர் சேகர் பாபு ஓர் இந்து விரோதி.திருச்சியில் பாஜக தலைவர் எச். ராஜா பேட்டி
திருச்சி ஸ்ரீரங்கம் அலங்கநாத சுவாமி திருக்கோயிலில் உள்ள கிழக்கு நுழைவாயிலில் கோபுரத்தின் முகப்பு பகுதியில் உள்ள முதல் நிலை கடந்த சனிக்கிழமை அன்று அதிகாலை உடைந்து விழுந்தது இதனை பாரதிய ஜனதா மூத்தத் தலைவர் ஹெச். ராஜா இன்று பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறுகையில்:
‘தமிழகத்தில் அதிக வருமானம் தரக்கூடிய கோவில்களில் திருச்சி ரங்கநாதர் கோவிலும் ஒன்று.
இப்படிப்பட்ட இக்கோவிலையே அறநிலையத்துறை பராமரிப்பின்றி வைத்திருந்தால் மற்ற கோவில்களின் நிலை என்ன என்பதை எண்ணிப்பாருங்கள்.
திமுக அரசை பொறுத்தவரை அதிக ஊழல் செய்தவர்களுக்கே பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில், இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜியை போல பல அமைச்சர்கள் செயல்படாமல் உள்ளனர்.
அவர்களில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும் ஒருவர். அவர் இந்து விரோதி.
2 வருடம் முன்பு இங்கே பாலாலயம் செய்யப்பட்டிருக்கும் நிலையில் இந்தக் காரை பெயர்ந்து விழுமளவு செப்பணியிடப்பட்டது என்றால் எவ்வளவு கொள்ளையடித்து இருப்பார்கள்.
இந்தக் கோபுரத்தை 2 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆய்வு செய்து முழுமையாக சரி செய்திருக்கவேண்டும். இதனை செய்யத் தவறிய ஸ்ரீரங்கம் முன்னாள் இணை ஆணையர் ஜெயராமனை கண்டிப்பாக தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.
மேலும், கடந்த இரண்டு ஆண்டு காலமாக ஸ்ரீரங்கம் கோவிலில் அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் பல்வேறு பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
திமுக ஐந்தாண்டு கால ஆட்சியை நிறைவு செய்யும்போது கோவில்களில் உள்ள தங்கம், சொத்துக்கள் எதுவும் இருக்கக் கூடாது என்பதே அவர்களின் நோக்கம்.
அறநிலையத்துறையில் பெருமாளுக்கும், லட்சுமிக்கும், விரோதமாக செயல்படும் அதிகாரிகள் இருக்கக்கூடாது. அவ்வாறு இருந்தால் பாஜகவினர் அறநிலையத்துறை அலுவலகம் புகுந்து முற்றுகை செய்வோம்.
உப்பு தின்றவர் தண்ணீர் குடிக்க வேண்டும்,’ என்று சொன்ன அமைச்சர் மனோ தங்கராஜ் எவ்வளவு உப்பு தின்றவர் என்பது எனக்குத் தெரியும்.
தமிழக அமைச்சரவையில், 17 அமைச்சர்கள் உள்ளனர். யார் யார் எவ்வளவு உப்பு தின்றனரோ, அவரவர் அவ்வளவுக்கும் தண்ணீர் குடிக்கத் தான் வேண்டும். மற்ற துறைகள்போல், அமலாக்கத்துறை இல்லை.
செந்தில் பாலாஜியை பொருத்தவரை, முகாந்திரம் தேவையில்லை. அவரே நீதிமன்றத்தில் வாங்கினேன்; திருப்பிக் கொடுத்து விட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
அதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதா என்பது தெரியவில்லை. அதனால், அமலாக்கத்துறை தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து 60 நாள்களில் வழக்கை நடத்த வேண்டும் என்று அனுமதி வாங்கியுள்ளது.
அந்த வழக்கு விசாரணைக்கு, உயர் நீதிமன்றம் விதித்த தடையையும், உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது. செந்தில் பாலாஜி போலீஸ் ஜீப்பில் ஏறியதை, நேற்று இரவு தான் பார்க்க முடிந்தது என்றார்.
பேட்டியின் போது திருச்சி மாவட்ட தலைவர் ராஜசேகரன்,
பாஜக பிரமுகர்கள் இல.கண்ணன் , கோவிந்தன்,மற்றும் ஏராளமான நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.