திருவரங்கம் கொள்ளிடம் ஆற்றில்
2வது சிறுவனின் உடல் மீட்பு.
திருச்சி திருவரங்கம் பட்டர் தோப்பு பகுதியில் உள்ள ஆச்சார்யா ஸ்ரீமத் பட்டர் குருகுலம் வேத பாடசாலை ஆசிரமம் அமைந்துள்ளது.
இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அர்ச்சகருக்கு படிக்கும் மாணவர்கள் தங்கியிருந்து தங்கி இருந்து வேதம் பயின்று வருகின்றனர்.
இந்தநிலையில் மேற்கண்ட பாடசாலையில் படிக்கும்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த விஷ்ணு பிரசாத் என்ற (வயது 13), ஆந்திராவை சேர்ந்த அபிராம் (வயது 13), மன்னார்குடியை சேர்ந்த ஹரி பிரசாத் ( வயது14), கோபாலகிருஷ்ணன் (வயது12) ஆகிய 4 மாணவர்கள் யாத்திரிநிவாஸ் எதிரே உள்ள கொள்ளிடம் ஆற்றில் நேற்று முன்தினம் குளிக்கச் சென்றனர்.

அவர்கள் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டனர். இதைத்தொடர்ந்து வெள்ளம் அவர்களை இழுத்துச் சென்றது.
இதில் கோபாலகிருஷ்ணன் என்ற மாணவன் அதிர்ஷ்டவசமாக வெள்ளத்தின் பிடியிலிருந்து தப்பி கரைக்கு ஓடி வந்தான்.
பின்னர் தன்னுடன் குளிக்க வந்த சக மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கிய தகவலை தெரிவித்துள்ளான். இதையடுத்து உடனடியாக வேத பாடசாலையில் இருந்து திருவரங்கம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து வெள்ளத்தில் மூழ்கிய அந்த 3 மாணவர்களையும் தேடினர். பின்னர் மன்னார்குடியைச் சேர்ந்த விஷ்ணு பிரசாத் சிறிது தூரத்தில் பிணமாக மீட்கப்பட்டார். மற்ற இரு மாணவர்களையும் தீயணைப்பு படை வீரர்கள் தொடர்ந்து தேடி வந்தனர்.
நீரில் மூழ்கிய நான்கு மாணவர்களுக்கும் நீச்சல் தெரியாது என தீயணைப்பு படை வீரர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஆற்றில் மூழ்கிய சிறுவர்களை தேடும் பணியில் சுமார் 25க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் கொள்ளிடம் பாலம் உடைந்த ஆற்றுப் பகுதியில் தீவிரமாக தேடி வந்தனர்.
.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வரை ஆற்றில் மூழ்கிய சிறுவர்களின் உடல் கிடைக்கவில்லை.
இந்நிலையில் நேற்று இரண்டாவது நாளாக தீயணைப்பு வீரர்கள் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய இரண்டு சிறுவர்களின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது ஒரு சிறுவனின் உடல் கிடைத்தது .அதனை மீட்டு தீயணைப்பு வீரர்கள் கரைக்கு எடுத்து வந்தனர்.மீட்கப்பட்ட சிறுவனின் பெயர் ஹரி பிரசாத். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து ஹரி பிரசாத் உடலை திருவரங்கம் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் ஒரு சிறுவனின் உடலை தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த சிலர் கூறும்போது:
எப்போதும் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடும்போது மாவட்ட நிர்வாகம் சார்பில் கொள்ளிடம் கரையோர மக்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்படும் ஆனால் 10 நாட்களுக்கு முன் தண்ணீர் திறந்து விடப்பட்டது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.இதனால் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் அதிகம் வருவது தெரியாமல் குளிக்கச் சென்ற மூன்று வேத பாடசாலை மாணவர்கள் பலியாகி உள்ளனர்.இது மாவட்ட நிர்வாகத்தின் கவனக்குறைவால் ஏற்பட்டுள்ளது என கூறினர்.