திருச்சியில் மிஸ்டர் திருச்சி ஆணழகன் போட்டியை அமைச்சர் கே என் நேரு தொடங்கி வைத்தார்.
திருச்சி மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்க அனுமதியுடன் கே.வி.எம் ஜிம் மற்றும் எஸ் கே கிளாசிக் சார்பில் மிஸ்டர் திருச்சி ஆணழகன் போட்டி நடைபெற்றது.
திருச்சி மேலபுலிவார் ரோடு தேவர் ஹாலில் நடைபெற்ற இந்தப் போட்டிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
இந்த தொடக்க விழாவில் மேயர் அன்பழகன், திமுக மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, எஸ்.டிவி சேர்மன் பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
தமிழ்நாடு அமெச்சூர் ஆணழகன் சங்க தலைவர் டாக்டர் ராஜேந்திர குமார் வரவேற்புரை ஆற்றினார். விழாவுக்கு தமிழ்நாடு அமெச்சூர் ஆணழகன் சங்க பொதுச்செயலாளர் அரசு தலைமை வகித்தார்.
திருச்சி மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கத்தில் சேர்மன் வேதமூர்த்தி, பொருளாளர் காளை என்கிற சுகுமார், டோர்னமெண்ட் டைரக்டர் சிவராமசுதன் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர்.
50 கிலோ முதல் 85 கிலோ வரையிலான உடல் எடை பிரிவில் 9 போட்டிகள் நடைபெற்றது.
இந்த போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்ஸ் ஃஆப் சாம்பியன்ஸ் பதக்கம் வழங்கப்பட்டது. முதல் பரிசாக 15 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக 10 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசாக 5 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 5 பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அமெச்சூர் ஆணழகன் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட திருச்சி மாவட்ட அமெச்சூர் சங்கம் ஆணழகன் சங்கம் அனுமதியுடன் இந்த போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டியில் ஏராளமான பார்வையாளர்கள் கலந்து கொண்டு போட்டியில் கலந்து கொண்டவர்களை உற்சாகப்படுத்தினர். மதுரை, கோவை, சேலம், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 10 பேர் நடுவர்களாக செயல்பட்டனர்.
இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்கள் அடுத்து நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.