திருச்சி விமான நிலையத்தில்
இளைஞரிடம்
துப்பாக்கி தோட்டா பறிமுதல்.
திருச்சி விமான நிலையத்தில் நாகையை சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் துப்பாக்கித் தோட்டா சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே அகஸ்தியம்பள்ளியை சேர்ந்தவர் சந்தோஷ் ராஜம் (வயது 22). கெமிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்துள்ள இவருக்கு, ஹைதராபாத்தில் உள்ள நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்துள்ளது.
வேலையில் சேர்வதற்காக, நேற்று திருச்சி விமான நிலையம் வந்த இவர், திருச்சியில் இருந்து ஹைதராபாத் செல்லும் ஏர் இண்டிகோ விமானத்தில் பயணிக்க காத்திருந்தார்.
இவர் கொண்டு வந்திருந்த உடமைகளை ஏர் இண்டிகோ பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, இவரது லேப்டாப் பையில், 5.56mm துப்பாக்கித் தோட்டா ஒன்று இருந்தது.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஏர் இண்டிகோ பாதுகாப்பு அதிகாரிகள் சந்தோஷிடம் விசாரணை நடத்தினர்.
ஆனால், ‘தனது பையில் துப்பாக்கித் தோட்டா வந்தது குறித்து தனக்கு ஒன்றும் தெரியாது’ என்று சந்தோஷ் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
அதையடுத்து, ஏர் இண்டிகோ பாதுகாப்பு அதிகாரி யாமினி, சந்தோஷ் மற்றும் அவரிடம் இருந்த துப்பாக்கித் தோட்டாவுடன், திருச்சி விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தார்.
மேலும், இதுகுறித்து யாமினி கொடுத்த புகாரின் பேரில் சந்தோஷ் மீது வழக்குப் பதிவு செய்து, திருச்சி விமான நிலைய போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.