காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களின் பாத பூஜை விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
காலை முதலே பள்ளி வளாகம் முழுவதும் தோரணங்களாலும் வண்ணக் கோலங்களாலும் அலங்கரிக்கப்பட்டது . பள்ளியின் சார்பாக அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணிக்கு பாத பூஜை விழா தொடங்கியது. பத்தாம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரும் பள்ளிக்கு வருகை தந்தனர். மாணவர்கள் தங்கள் பெற்றோர்களின் பாதங்களை பன்னீர் மற்றும் பால் கொண்டு கழுவி, மஞ்சள் குங்குமம் இட்டு, மலர் தூவி வணங்கினர்.
தங்களுடைய குழந்தைக்கு பெற்றோர்கள் ஆசி கூறி அதிக மதிப்பெண்களைப் பெற வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். இதில் கலந்துகொண்ட அத்தனை மாணவர்களும் தங்களுடைய பெற்றோர்களின் தியாகத்தை நினைத்து கண்ணீர் வடித்தனர். பிள்ளைகளுக்கு எப்பொழுதும் உறுதுணையாக இருப்போம் என்று பெற்றோர்களும் கண்ணீர் விட்டு கலங்கிய சம்பவம் நிகழ்ச்சிக்குரியதாக இருந்தது.

பெற்றோர்கள் தங்களுடைய கருத்துக்களைப் பதிவு செய்யும்பொழுது இத்தகைய விழா தங்கள் குழந்தைகளின் மேல் இருக்கக்கூடிய பாசத்தை மேலும் அதிகப்படுத்தி இருப்பதாகவும் அவர்கள் வளர்ச்சியில் இன்னும் கூடுதல் அக்கறை செலுத்தப் போவதாகவும் தெரிவித்தார்கள்.
மாணவர்களோ தங்கள் பெற்றோர்களை புரிந்து கொள்வதற்கு மிகச்சிறந்த வாய்ப்பாக இந்த விழா அமைந்ததாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். தமிழகத்திலேயே முதல் முறையாக அரசுப்பள்ளியில் இந்த நிகழ்வு நடைபெற்று உள்ளது, நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தி. கீதா மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
இந்த சிறப்பான விழாவை பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரும் பள்ளி மேலாண்மைக் குழு வைச் சேர்ந்தவர்களும் ஊர்ப்பொதுமக்களும் வெகுவாகப் பாராட்டினார்கள்.