மணப்பாறை அருகே
காண்டிராக்டர் வீட்டில் தங்கம்- வெள்ளி நகைகள் கொள்ளை
அழுந்தூரில் ஷோரூம் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் டயர்கள் திருட்டு.
மணப்பாறை அருகே உள்ள மணப்பாறைபட்டி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன் (வயது 68).இவரது மகன் மனோஜ். இவர் சென்னையில் மாநகராட்சி பணிகளை டெண்டர் எடுத்து செய்து வருகிறார்.
மணப்பாறை வீட்டில் நாகராஜன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் தனியாக வசித்து வந்தனர்.இந்த நிலையில் கடந்த 6ம் தேதி நாகராஜன் வீட்டை பூட்டி விட்டு மகனை பார்ப்பதற்காக சென்னை புறப்பட்டுச் சென்றார். பின்னர் 2 தினங்கள் அங்கு தங்கினார். இந்த நிலையில் மணப்பாறைப்பட்டி ரோட்டில் உள்ள அவரது வீட்டில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அக்கம் பக்கத்தினர் அவருக்கு தகவல் கொடுத்தனர். உடனே நாகராஜன் மணப்பாறை விரைந்து வந்தார். பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 6 பவுன் தங்க நகைகள் மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கதவு பூட்டுகளை உடைத்து திருடி சென்றது தெரிய வந்தது. இது தொடர்பாக நாகராஜன், மணப்பாறை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோன்று மணிகண்டம் அருகே
ஆழுந்தூர் பகுதியில் கனரக வாகன உதிரிபாக கடையின் பூட்டை உடைத்து டயர்களை கொள்ளையர்கள் திருடி சென்றனர்.மணப்பாறை பண்ணப்பட்டி மேல் பாகம் சேர்ந்தவர் பிரசாத்( வயது 41) இவர் மணிகண்டம் அருகே அழுந்தூரில் சத்குரு அசோசியேட்ஸ் என்ற பெயரில் கனரக வாகன உதிரிப்பாக கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல் இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றார்.
கடையில் சுப்பிரமணி என்ற காவலாளி இரவு காவல் பணியில் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் அவர் நள்ளிரவில் தூங்கி விட்டதாக கூறப்படுகிறது. அப்போது மர்ம நபர்கள் கடைக்குள் புகுந்து ஒரு ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான 12 லாரி டயர்களை திருடி சென்று விட்டனர். இது தொடர்பாக பிரசாத் மணிகண்டம் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.