6 பேரை கைது செய்ய என்.ஐ.ஏ. முகாம்.திருச்சி சிறை வளாகத்தில் பரபரப்பு.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் உள்ளது. இங்கு வெளிநாடுகளைச் சேர்ந்த குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தேசிய புலனாய்வு முகமை (என் ஐ ஏ) அவ்வப்போது முகாமில் அடைக்கப்பட்டுள்ள நபர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு என்.ஐ.ஏ. அதிகாரிகள் முகாமில் சோதனை நடத்தி சிலரின் செல்போன்களை கைப்பற்றி சென்றனர்.
இந்த நிலையில் இன்று கேரளாவில் இருந்து என் ஐ ஏ அதிகாரி தர்மராஜ் தலைமையில் ஒரு குழு திருச்சியில் முகாம்யிட்டுள்ளனர்.
அவர்கள் முகாமில் அடைக்கப்பட்டுள்ள 6 பேரை கைது செய்து அழைத்துச் செல்ல வந்திருப்பதாக தகவல் வெளியானது.
இதையடுத்து சிறப்பு முகாமின் தலைவரான கலெக்டர் பிரதீப் குமாரிடம் அந்த அதிகாரிகள் அனுமதியை நாடி உள்ளனர். இது தொடர்பாக கலெக்டர் இடம் கேட்டபோது, என் ஐ ஏ அதிகாரிகளிடம் வழக்கு விவரங்களை கேட்டிருக்கிறேன். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இது குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் கேட்ட போது கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் கேரளாவின் அரபிக் கடலில் விழிஞ்சம் கடற்கரைக்கு அருகே ஹெராயின் மற்றும் ஆயுதங்கள் கடத்திச் சென்ற இலங்கை படகு பிடிபட்டது.அதில் சோதனையிட்டபோது, 300.323 கிலோ ஹெராயின், 5 ஏ.கே.-47 துப்பாக்கிகள், 1000 9 எம்.எம் தோட்டாக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. படகின் தண்ணீர் தொட்டிக்குள், 301 பாக்கெட்டுகளில் ஹெராயின் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த நந்தனா, தாசப்பிரியா, குணசேகரா, செனாரத், ரணசிங்கா, நிசாங்கா ஆகிய 6 சிங்களர் கைது செய்யப்பட்டு கடந்த 2021 மார்ச் மாதம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு, இதில் தொடர்பு இருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இருந்தபோதிலும் முழு விவரம் தெரியவில்லை.
இதற்கிடையில் முகாம் சிறை இருக்கும் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீண்டும் திருச்சியில் முகாமிட்டுள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.