ஆற்றங்கரையில் துணி துவைத்த பெண்ணிடம் ஏழரை பவுன் தாலியை அறுத்துச்சென்ற 2 வாலிபர்களுக்கு போலீசார் வலை.
வாய்க்காலில் துணி துவைத்துக் கொண்டிருந்த பெண்ணிடம் ஏழரை பவுன் செயின் பறிப்பு.
மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களுக்கு போலீசார் வலை.
திருச்சி மண்ணச்சநல்லூர்
கணபதி நகர் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி சாருமதி (வயது 42).
இவர் மண்ணச்சநல்லூர் உளுந்தக்குடியில் உள்ள தனது பெற்றோரை பார்ப்பதற்காக வந்தார். பின்னர் அவர் அங்குள்ள புள்ளம்பாடி வாய்க்காலில் பட்டத்து லட்சியம்மன் கோவில் அருகில் தாயின் ஆடைகளை துவைப்பதற்காக எடுத்து சென்று வாய்க்கால் கரையோரம் கிடந்த கருங்கல்லில் துணிகளை துவைத்து கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் இரண்டு வாலிபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் குளிக்க வந்திருக்கலாம் என சாருமதி நிலைத்த நிலையில் எதிர்பாராத விதமாக திடீரென அதில் ஒருவன் சாருமதி கையை பிடித்துக்கொள்ள, இன்னொருவன் அவர் கழுத்தில் அணிந்திருந்த ஏழரைப்பவுன் தாலி செயினை பறித்துக் கொண்டான். இதனால் அதிர்ச்சி அடைந்த சாருமதி திருடன் திருடன் என கூச்செலிட்டார். ஆனால் அக்கம் பக்கத்தில் யாரும் இல்லாததால் ஒன்றும் செய்ய இயலவில்லை.
பின்னர் கொள்ளையர்கள் இருவரும் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் திருப்பாஞ்சலி சாலையில் தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து சாருமதி மன்னச்சநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி சென்ற இருவரையும் தேடி வருகின்றனர்.