இஷ்டப்பட்டு படித்தால் என்றைக்கும் மறக்காது:கவிஞர் நா.முத்துநிலவன்.
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு தாய்த்தமிழ் போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் இலக்கியக்கூடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கவிஞர் நா.முத்துநிலவன் பேசியதாவது:
உலகில் பிற மொழிகளுக்கு இல்லாத பெருமை தமிழுக்கு உண்டு. இணையத்தில் கூட ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக பெருமை பெற்று இருப்பது தமிழ் மொழிதான்.
பாடத்துக்கும், சமூகத்துக்கும் நிறைய வேறுபாடு உள்ளது. எனவே, முதல் மதிப்பெண் வாங்குபவர்களால் மட்டுமே சாதிக்க முடியும் என்பது தவறானது. ஆகையால், பிறதிறமைகளோடு நல்ல மதிப்பெண்களை பெறுவோர்களால்தான் சாதிக்க முடிகிறது.

ஒரு மன்னராகப்பட்டவர் நாட்டையும் காக்கத் தவறி, வீட்டையும் காக்கத் தவறிய பிறகு, அவர் வாய்மையோடு இருந்தும் பயனில்லை. பொது அறிவு என்று ஒரு பாடம் இல்லை. எனவே, பல்வேறு புத்தகங்களின் தொகுப்புதான் பொது அறிவு. எனவே, தினமும் நாளிதழை வாசிக்க வேண்டும்.
பாடத்துக்காக மட்டும் படித்தால் பாஸ் மார்க்கு கூட வாங்க முடியாது. அறிவுக்காக படித்தால் நல்ல மதிப்பெண் வாங்கலாம். கஷ்டப்பட்டு, போராடி வரிக்கு வரி மனப்பாடம் செய்தால் மனதில் பதியாது. ஆனால், அதை இஷ்டப்பட்டு படித்தால் என்றையும் மறக்காது.
அதோடு வரிக்கு வரி கேள்விகளை எழுப்பிக்கொண்டே படித்தால் வெற்றி பெறலாம். தீய பழக்கங்களை பெற்றோர்களோ, ஆசிரியர்களோ கற்றுத்தரமாட்டார்கள். இவை நட்பில் இருந்து தான் கற்றுக்கொள்ளப்படுகிறது.
எனவே, நல்ல நட்பைத் தேர்வு செய்தால் சிகரத்தில் இருக்கலாம் என்றார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.டி.பஷீர் அலி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர்கள் மு.ராஜா, கோபு, சங்கத்தின் நிர்வாகிகள் அறிவொளி கருப்பையா, பீர்முகமது, தமிழரசன், புத்திரசிகாமணி, செல்வி, மனோன்மணி, குமரேசன், மணிமாறன், பிரபாகரன், தமிழ்குமரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.