மரங்களை வெட்டும் முன் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கடிதம் பெற வேண்டும்.தண்ணீர் அமைப்பு நீலமேகம் கோரிக்கை.
பொதுமக்கள் மற்றும் மரம் வெட்டும் முதலாளிகள் மரங்களை வெட்டும் முன் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கடிதம் வாங்க வேண்டும் – தண்ணீர் அமைப்பு வழியுறுத்தல்
பொதுபயன்பாட்டில் உள்ள மரத்தை வெட்டவோ அதன் மீது ஆணி அடிக்கவோ யாருக்கும் உரிமை இல்லை.
பொது இடத்தில் உள்ள மரத்தை வெட்ட வேண்டுமென்றால் நெடுஞ்சாலைத்துறையோ, வருவாய்த்துறையோ, மாநகராட்சியோ, பொதுப்பணித்துறையோ, வனத்துறையோ மரம் வெட்ட சட்டப்படி எழுத்துபூர்வாமாக அனுமதி தர வேண்டும். அது அம்மரம் உள்ள நிர்வாக எல்லையை பொறுத்து மாறுபடும். பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது, பொது போக்குவரத்திற்கு தடையாக உள்ளது, கட்டிடத்தை மறைக்கிறது என்று சொல்லி, எக்காரணத்திற்க்காகவும் முறையான அனுமதியில்லாமல் அவரவர் விருப்பத்திற்கு மரங்களை வெட்டுவதோ, ஆணி அடிப்பதோ, வேறு வகையில் சேதம் விளைவிப்பதோ சட்டப்படி குற்றமாகும்.
ஒரு மரத்தில் பத்து ஆணிகள் அறைந்தால் அம்மரம் நோய்வாய்பட்டு இறந்துவிடும் என்கிறார்கள் அறிவியலாளர்கள். ஆக பொது மரங்கள் வெட்டுவதை நீங்கள் (பொதுமக்கள்) கண்டால் உடனே அவர்களிடம் மரம் வெட்டுவதற்கு பெறப்பட்ட அனுமதி கடிதத்தை காட்டச் சொல்லுங்கள். கொடுக்கப்பட்டுள்ள அனுமதி கடிதத்தை வாங்கி படியுங்கள். அந்த மரத்தை வெட்டுவதற்கும்கூட பல நிபந்தனைகளை அரசு நிர்வாகம் விதித்திருக்கும். விதிக்கப்பட்ட நிபந்தனைகளின்படிதான் அவர்கள் மரங்களை வெட்டுகிறார்களா என்றும் உறுதி செய்துக் கொள்ளுங்கள்.
மரம் வெட்டும் வேலை செய்யும் கூலித்தொழிலாளியின் முதுகுக்கு பின் ஒளிந்திருக்கும் முதலாளிகளை அடையாளம் காணுங்கள். ஒருவேளை அவர்களிடம் அனுமதி கடிதம் இல்லையென்றாலோ, நிபந்தனைப்படி காரியங்களை செய்யவில்லை என்றாலோ மரம் வெட்டுவதை தடுக்கும் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கோடு உடனே மரம் வெட்டும் பணியை நிறுத்த சொல்வது, கேள்வி கேட்பது, சம்மந்தபட்ட துறைக்கு (அ) காவல்துறைக்கு புகார் அளிப்பது, சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துவது நமது சனநாயக கடமையாகும். சிறப்பு என்னவென்றால் இந்திய அரசியலமைப்பு சட்டம் அந்த கடமையை நமக்கு கொடுத்து இருக்கிறது.
சுற்றுச்சூழல் குறித்த குடிமக்களுக்கான கடமைகள், அரசியலமைப்புச் சட்டத்தின் நான்காவது (51)(A) பகுதியில், குடிமக்களுக்கான அடிப்படை கடமைகள் என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, “இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரும், காடுகள், ஏரிகள், ஆறுகள், காட்டு விலங்குகள் மற்ற உயிரினங்கள் உள்பட உள்ள இயற்கைச் சுற்றுச் சார்புகளை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் மற்றும் உயிரினங்களிடத்தில் பரிவு காட்டவும் ஆவன புரிவதை கடமையாக கொள்ள வேண்டும்”. என்று நமது சட்டம் சொல்கிறது.
எனவே மரங்கள் வெட்டுப்படுவதை தடுக்கும் நமது முயற்சியானது சட்டப்படி நமக்கு கடமையாகிறது. அதே போல முறையான அனுமதியோடு சாலை விரிவாக்கம் அல்லது இதர வளர்ச்சி பணிகளுக்காக மரங்கள் வெட்டப்பட்டால், வெட்டப்பட்ட ஒவ்வொரு மரங்களுக்கு ஈடாக 10 புதிய மரக்கன்றுகளை நட்டு, பராமரித்து வளர்க்க வேண்டும் என்று பல்வேறு வழக்குகளில் உயர்நீதிமன்றம் பரிந்துரைத்திருக்கிறது. மரங்கள் வெட்டபட்டுவிட்டால் கூட உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, நாம் வெட்டப்பட்ட ஒவ்வொரு மரங்களுக்கு ஈடாக 10 புதிய மரக்கன்றுகளை நட்டு, பராமரிக்க அரசு நிர்வாகத்தை வலியுறுத்த முடியும்.

எனவே மரங்களை வெட்டுவதை பார்த்தால் பொதுமக்கள் கேள்வி கேளுங்கள்
அதே சமயம் நமது நீண்ட நெடிய பண்பாட்டிலும் மரங்கள் தெய்வமாக கருதப்பட்டு இருக்கிறது. “மரத்தை வெட்டி, அதிலுள்ள மூலிகையை எடுத்துதான் என் உயிரை காப்பாற்ற வேண்டுமென்றால், விட்டுவிடுங்கள் நான் சாகிறேன், மரம் வாழட்டும்” என்று ஈராயிரமாண்டுகளுக்கு முன்பே சங்க புலவன் பாடிய உயிர்ம நேயத்தை, மரபை சங்க இலக்கியம் பதிவு செய்து இருக்கிறது.
தண்ணீர் அமைப்பின் கோரிக்கை:-
1.மரங்களை வெட்டினால் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகித்திடம் 24X7 நேரமும் தெரிவிக்க கைப்பேசி அறிவிக்க வேண்டும் .
2.விலங்குகளை பாதுகாக்க Bule Cross போல, மரங்களை பாதுகாக்க Brown Cross (பிரவுன் குழு) மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்க வேண்டுகிறோம். என மாவட்ட நிர்வாகத்திடம் தண்ணீர் அமைப்பு தொடர்ந்து வழியுறுத்துகிறோம்.
எனவே நாம் எல்லோரும் நமது பண்பாட்டு மரபின்படி, சட்டப்படி நமது கடமையை செய்வோம். மரங்களை, இயற்கையை பாதுகாப்போம்.
என தண்ணீர் அமைப்பு செயல் தலைவர் கே.சி. நீலமேகம் வலியுறுத்தி உள்ளார்.