Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி-மலேசியா இடையே விமான சேவையை அதிகரிக்க நடவடிக்கை.மலேசியா சுற்றுலாத்துறை துணை அமைச்சர் பேட்டி.

0

 

இந்தியாவிலிருந்து 20 லட்சத்துக்கும்
அதிகமான சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

மலேசிய சுற்றுலாத்துறை துணை அமைச்சர் பேட்டி.

கொரோனா தொற்றுக்குப் பின்னர் சர்வதேச சுற்றுலா அனுமதிக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்தியாவிலிருந்து சுமார் 20 லட்சம் சுற்றுலா பயணிகள் மலேசியாவுக்கு வருகை தரலாம் என மலேசிய சுற்றுலா, கலை மற்றும் கலாச்சாரத்துறை எதிர்பார்த்துள்ளது என்றார் அத்துறையின்
துணை அமைச்சர் ஒய்.பி. டத்தோஸ்ரீ சாந்தாரா.

மலேசிய சுற்றுலா, கலை மற்றும் கலாச்சாரத்துறை, மலேசியா சுற்றுலா முகவர்கள் அமைப்பு, மற்றும் மலேசியா சுற்றுலா பணப் பரிமாற்றப்பிரிவு சார்பில் ஆகஸ்ட் 17 முதல், சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக இந்தியாவில் 4 முக்கிய நகரங்களில் சுற்றுலா முகவர்கள் மற்றும் ஹோட்டல் நிர்வாகிகளுக்கான சிறப்பு கூட்டம் மற்றும் கண்காட்சியை நடத்தி வருகிறது.

அந்த வகையில் விசாகப்பட்டிணத்தில் தொடங்கி, கொல்கத்தா, கொச்சி நகரங்களை அடுத்து நேற்று மாலை, திருச்சியில் (தமிழகத்தில்) நடைபெற்றது.

அதனையொட்டி நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில், மலேசிய சுற்றுலா, கலை மற்றும் கலாச்சாரத்துறை எதிர்பார்த்துள்ளது என்றார் அத்துறையின் அமைச்சர் ஒய்.பி. டத்தோஸ்ரீ சாந்தாரா.

மேலும் கூறியது:
கொரோனா பொதுமுடக்கத்துக்குப் பின்னர், 2022 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மலேசியாவில் சர்வதேச போக்குவரத்துக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதனையொட்டி மலேசியாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் மலேசியாவுக்கான விமான சேவைகளும் அதிகரிக்கப்பட்டு, கொரோனா விதிமுறைகளிலும் தளர்வுகளும் விடப்பட்டுள்ளன. இரு முறை தடுப்பூசி செலுத்திக்கொண்ட நபர்கள், மலேசியாவுக்கு எந்தவிதமான சோதனைகளோ, தனிமைப்படுத்துதலோ இன்றி சுற்றுலா வரமுடியும். இந்தியா மலேசியாவுக்கு மிகச்சிறந்த வணிக தளமாக அமைந்துள்ளது. அந்த வகையில் சுற்றுலாப் பயணிகளும் அதிகம் வருவது வழக்கம்.

ஆண்டுதோறும் கோடை விடுமுறை காலங்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருவதை அடுத்து சிறப்பு சுற்றுலா நிகழ்வுகளும் நடைபெறும். அந்த வகையில் வரும் மே 18 முதல் 20 வரையில் சிறப்பு நிகழ்ச்சிகளை தெற்காசிய சுற்றுலா மற்றும் எக்சேஞ்சி அமைப்புகள் மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளன.

கடந்த 2019 ஆம் ஆண்டு 7,35,309 பேர் சுற்றுலா வந்தனர். கொரோனாவுக்குப் பின்னர் நிகழாண்டில் கடந்த ஜூன் மாதம் வரை 71,841 சுற்றுலாப் பயணிகள் மலேசியாவுக்கு வருகை தந்துள்ளனர்.

வாரந்தோறும் 220 விமானங்கள் இந்தியாவுக்கு இயங்கி வரும் நிலையில் மேலும் அதிகரிக்கப்படவுள்ளது. அதன் அடிப்படையில் வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிலிருந்து மலேசியாவுக்கு சுமார் 20 லட்சம் பேர் (2 மில்லியன்) சுற்றுலா வரலாம் என மலேசிய சுற்றுலாத்துறை ஏதிர்பார்த்துள்ளது.

அதற்கென சுற்றுலா முகவர்கள், ஹோட்டல் நிறுவனத்தினர், விமான நிறுவனத்தினர் அமைப்புகள், சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

பயணிகளுக்கு ஏதுவாக இ-விசா முறைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே விண்ணப்பித்த ஒரு சில வாரங்களிலேயே சுற்றுலா மேற்கொள்ள இது வழி வகுக்கும்.

மலேசிய சுற்றுலாத்துறை இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில், சுற்றுலா மையத்தை அமைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. மாநிலத்தின் மத்தியில் அமைந்துள்ள திருச்சி மாநகரில் சுற்றுலா மையம் அமைப்பதின் மூலம் அனைவரும் பயன்பெறலாம் என்ற நோக்கத்தில் தமிழக அரசுடன் இணைந்து சுற்றுலா மையம் அமைக்கப்படும் என்றார்.

நிகழ்வின்போது, சபா சுற்றுலா பிரிவு அலுவலர் ஹம்ப்ரே, தென்னிந்தியா மற்றும் இலங்கை சுற்றுலா இயக்குநர் ரசைதி அப்து ரஹீம், மலேசிய சுற்றுலா முகவர்கள் சங்க துணைத் தலைவர் கணீஷ் ராமா, பேட்டிக் ஏர் நிறுவன தெற்காசிய தொடர்பு தலைமை அலுவலர் சுரேஷ்வண்ணன், மலேசியா சுற்றுலாத்துறை தொடர்பு அலுவலர் ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

மலேசியாவின் மலிண்டோ விமான நிறுவனம் மற்றும் ஏர் ஏசியா விமான நிறுவனங்கள் சார்பில், திருச்சி-மலேசியா இடையே விமானப் போக்குவரத்தை மேற்கொண்டு வந்தன. கொரோனா பொதுமுடக்தத்தால் போக்குவரத்து குறைந்தது. இந்நிலையில் மீண்டும் விமான சேவைகளை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

இது குறித்து பேட்டிக் ஏர் நிறுவனத்தின் தெற்காசிய தொடர்பு தலைமை அலுவலர் சுரேஷ்வண்ணன் கூறுகையில்,
மலிண்டோ ஏர் நிறுவனம், பேட்டிக் ஏர் என்ற பெயர் மாற்றத்துடன் மீண்டும் களம் இறங்குகிறது. திருச்சிக்கு தினசரி 2 விமானங்கள் வீதம் ஏற்கெனவே இயக்கப்பட்டு வந்தது. தற்போது கொரோனா தொற்றுக்குப் பின்னர் மீண்டும் அதிகளவு விமான சேவைகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக திருச்சிக்கு வந்து செல்லும் விமானங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.