ஸ்ரீரங்கத்தில் மீண்டும் அடாவடி வசூலுக்கு ஆதரவு அளிக்கிறதா திமுக ? வழக்கறிஞர் மநீம கிஷோர் குமார் கேள்வி.
மக்கள் நீதி மய்யத்தின் தென்மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஸ்ரீரங்கத்தில் மீண்டும் அடாவடி வசூலுக்கு ஆதரவளிக்கிறதா திமுக அரசாங்கம்…?
கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஸ்ரீரங்கம் பகுதி பொதுமக்களின் பலத்த எதிர்ப்பின் காரணமாக ஸ்ரீரங்கம் திருக்கோவிலுக்கு வெளியூரிலிருந்து கார் மற்றும் பேருந்து மூலமாக வரும் பக்தர்களிடம் வசூலிக்கப்படும் வாகன நுழைவு கட்டணம் மற்றும் வாகன நிறுத்தத்திற்கான கட்டணத்தை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது அன்றைய மாவட்ட நிர்வாகம்.
ஆனால் தற்பொழுது மீண்டும் ஸ்ரீரங்கம் திருக்கோவிலுக்கு வெளியூரிலிருந்து வரும் பக்தர்களின் வாகனத்திற்கான கட்டணத்தை வசூலிக்கும் பொருட்டு கடந்த 2021-டிசம்பர் மாதம் திருச்சி மாநகராட்சி நிர்வாகம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும். இந்த தீர்மானத்தின் அடிப்படையில் மேற்படி நுழைவு கட்டணத்திற்கான ஏல தேதி அறிவிக்கப்பட்டதுடன் வரும் 2022-ஏப்ரல் மாதம் முதல் மேற்படி மக்கள் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்ட ஸ்ரீரங்கம் வாகன வசூல் நடைமுறை மீண்டும் தொடங்கப்படவுள்ளதாக ஸ்ரீரங்கம் பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
இந்த மக்கள் விரோத செயலை மக்கள் நீதி மய்யம் கட்சி திருச்சி தென் மேற்கு மாவட்டம் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.
வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்ல வாக்களிக்காத மக்களுக்கான அரசு தான் இந்த அரசு என மேடைக்கு மேடை பேசும் தமிழக முதல்வர் அவர்கள் ஸ்ரீரங்கம் பகுதி மக்களின் எதிர்ப்பின் காரணமாக கைவிடபட்ட ஒரு “மக்கள் விரோத திட்டத்தை” திருச்சி மாநகராட்சி நிர்வாகம் தனது வருவாயை காரணம் காட்டி மீண்டும் துவங்க முயலுவதை தடுத்து நிறுத்த மக்கள் நீதி மய்யம் கட்சி திருச்சி தென் மேற்கு மாவட்டம் தமிழக முதல்வரை வலியுறுத்தி கேட்டுகொள்கிறோம்.
இதில் கொடுமை என்னவென்றால் ஸ்ரீரங்கத்திற்கு வரும் பக்தர்கள் தங்களது வாகனத்தை ரோட்டில் தான் நிறுத்துகிறார்கள் என்பது வேதனையின் உச்சகட்டம்.
என மக்கள் நீதி மய்யத்தின் திருச்சி தென் மேற்கு மாவட்ட செயலாளர் வக்கீல்.S.R.கிஷோர்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.