மு.க.ஸ்டாலின் துபாய் பயணம்:
தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக அல்ல.
திருச்சியில் டி.ஜெயக்குமார் பேட்டி.
மு.க.ஸ்டாலின் துபாய் சென்றிருப்பது தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக அல்ல என்றும், அது அவரது சொந்தப் பயணம் என்றும் திருச்சியில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
தி.மு.க. பிரமுகரை தாக்கியது உள்ளிட்ட 3 வழக்குகளில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த அ.தி.மு.க.முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடந்த 14-ம் தேதி முதல் திருச்சியில் தங்கி கண்டோன்மெண்ட் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார்.
இந்நிலையில் தான் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து கண்டோன்மெண்ட்
காவல் நிலையத்திற்கு ஜெயக்குமார் கையெழுத்திட வர புறப்பட்ட போது மலர் தூவி அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள்,மற்றும் மகளிர் அணியினர் வரவேற்றனர்.
இன்று கடைசியாக கையெழுத்திட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பின்
செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-

திருச்சியில் உள்ள கழகத் தொண்டர்கள், நிர்வாகிகள் காட்டிய அன்பு என்னை திக்கு முக்காட செய்தது. காலை ஒருவர் வீடு, மதியம் ஒருவர் வீடு, மாலை ஒருவர் வீடு என இதுவரை 300-க்கும் அதிகமானோர் சேர்ந்து கழக சகோதரர்கள் என்னை அன்புடன் கவனித்தார்கள்.
பத்திரிக்கையாளர்களை முறையாக பேட்டி எடுக்க கூட காவல்துறையினர் இங்கு அனுமதிக்கவில்லை.
தொடர்ந்து பல அராஜகங்களை தி.மு.க.வினர் செய்து வருகின்றனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாய் பயணம் குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில்,
ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ். சென்றபோது எவ்வளவு முதலீடுகள் ஈர்க்கப்பட்டது என்பது குறித்து தெளிவாக எடுத்துக் கூறினர். ஏற்கனவே விதைகள் போடப்பட்டது. ஆனால், தற்போது மு.க ஸ்டாலின் சென்றிருப்பது அவருடைய சொந்த பயணத்திற்காகவா அல்லது முதலீடுகளை ஈர்ப்பதற்காகவா? என்று தெரியவில்லை.என்ன கிழிக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நிதியமைச்சர் பழனிவேல் தியாகாராஜன் வாய் திமிருடன் பேசி வருகிறார்.
2 கோடியே 14 லட்சம் பேருக்கு மாதம் 1,000 ரூபாய் கொடுப்போம் என்று வாக்குறுதி அளித்தார்கள்.5 வருடத்திற்கு கொடுக்க வேண்டும் என்றால் அவ்வளவு நிதி நம்மிடம் உள்ளதா ?. கல்விக் கடன் ரத்து_ விவசாய கடன் ரத்து என்று மக்களை திசைதிருப்பி ஏமாற்றி வாக்குகளை திமுகவினர் பெற்றார்கள்.
தாலிக்கு தங்கம் என்கிற மகத்தான திட்டத்திற்கு மூடு விழா செய்து விட்டனர்.
நிதிநிலையை பெருக்குவதற்கு என்ன மாதிரியான வழிமுறைகள் உள்ளது என்பதனை யோசிக்கவே இல்லை. அதற்காக வந்தவுடன் அமைக்கப்பட்ட பொருளாதார நிபுணர் குழு இதுவரை என்ன செய்துள்ளது ?
திறமையற்ற நிர்வாகம் தமிழகத்தை ஆண்டு வருகிறது. நான் கையெழுத்திட வரும்போது கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் எழுச்சியோடு வருவது வழக்கமான நிகழ்வு. எனக்கு கொடுக்கும் வரவேற்பை பொருத்து கொள்ள முடியாமல் வழக்கு போட்டால் அதனை நீதிமன்றத்தில் எதிர்கொள்வோம்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
அதைத்தொடர்ந்து டி. ஜெயக்குமாருக்கு உற்சாக வரவேற்பு அளித்து சென்னைக்கு அவரை அ.தி.மு.க நிர்வாகிகள் வழியனுப்பி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி நடராஜன், குமார், பரஞ்ஜோதி, அமைப்புச் செயலாளர் ரத்தினவேல், முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, பூனாட்சி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் இந்திராகாந்தி, பரமேஸ்வரி, சந்திரசேகர், மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர்கள் சீனிவாசன், பொன் செல்வராஜ், திருச்சி வடக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் புல்லட் ஜான், திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் வக்கீல் ராஜ்குமார் ,ஐயப்பன், பத்மநாதன், ஆவின் சேர்மன் கார்த்திகேயன், சிந்தை முத்துக்குமார், அன்பழகன் ,சுரேஷ் குப்தா, முஸ்தபா, ஏர்போர்ட் விஜி, நாகநாதர் பாண்டி, வக்கீல்கள் தாமரைச்செல்வன், ஜெயராமன் ,சுரேஷ், நிர்வாகிகள் ஜவகர்லால் நேரு ,என்ஜினீயர் ராஜா,ரமேஷ், சகாதேவ்பாண்டியன்,வசந்தம் செல்வமணி, வண்ணார் பேட்டை ராஜன்,ஒத்தக்கடை மகேந்திரன் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக முன்னாள் அமைச்சர் வேலுமணி சென்னையில் இருந்து கார் மூலம் திருச்சி வந்து ஜெயக்குமாரை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். பின்னர் திருவரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு சென்று அவர் வழிபட்டார். அதை தொடர்ந்து கோவைக்கு கார் மூலம் புறப்பட்டு சென்றார்.