இளநீர் விற்ற பணம் ஒரு லட்சத்தை பஞ்சாயத்து யூனியன் பள்ளிக்கு நன்கொடையாக வழங்கிய திருப்பூர் பெண்மணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து.
பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றது முதல் மாதந்தோறும் வானொலியில் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ (மன் கி பாத்) என்ற தலைப்பில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
இதன்படி இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று வானொலி மூலம் 85-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “நாம் அனைவரும் நமது கடமைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இளைஞர்களை கொண்ட நாட்டுக்கு சாத்தியம் அற்றது என்று ஏதுமில்லை. இளைஞர்களை கொண்ட நாட்டினால் எதனையும் சாதிக்கமுடியும்.
30ம் தேதியானது மகாத்மா காந்தியின் கொள்கைகள் குறித்து நமக்கு நினைவூட்டுகின்றன.
இந்தாண்டு நேதாஜி பிறந்த நாள் அன்று குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் துவங்கியது. மகாத்மா நினைவு நாள் வரை நீடிக்கும்.
தேசியப் போர் நினைவிடத்தில் சுதந்திரம் அடைந்ததில் இருந்து வீரமரணம் அடைந்த நாட்டின் அனைத்து துணிச்சலான வீரர்களின் பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இந்தியா கேட் பகுதியில் நேதாஜியின் டிஜிட்டல் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
அமர்ஜவான் ஜோதியில் உள்ள விளக்கு, தேசிய போர் நினைவிடத்தில் இணைக்கப்பட்டதை நாம் பார்த்தோம். இந்த உணர்ச்சிகரமான நாளில், நாட்டு மக்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் அனைவரும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டனர்.
முன்னார் ராணுவ வீரர்கள் சிலர் அமர்ஜவான் ஜோதி குறித்து கடிதம் எழுதி உள்ளனர்.
தமிழகத்தில் உள்ள திருப்பூர் மாவட்டம் உடுமலையில் வசிக்கும் தாயம்மாள் என்ற பெண் செயல் நமக்கு முன்மாதிரியாக உள்ளது. அவருக்கு சொந்தமாக எந்த நிலமும் இல்லை. பல ஆண்டுகளாக, இளநீர் விற்றே அவரது குடும்பம் வாழ்ந்து வருகிறது.
அவரது குழந்தைகள் சின்னவீரம்பட்டி பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர்.
அந்த பள்ளியின் உள்கட்டமைப்பை மேற்கொள்ள இளநீர் விற்றதன் மூலம் கிடைத்த ரூ.1 லட்சத்தை பள்ளிக்கு நன்கொடையாக தாயம்மாள் அளித்தார். இதனை செய்வதற்கு மிகப்பெரிய மனதும், மிகப்பெரிய சேவை செய்யும் மனதும் தேவை” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.