கேரளாவில் இருந்து எடுத்து வரப்பட்ட அச்சன்கோவில் ஐயப்பன் ஆபரண பெட்டிக்கு தென்காசியில் வரவேற்பு.
கேரள மாநிலம் அச்சன்கோவில் தர்ம சாஸ்தா கோயிலில் மகோற்சவ விழாவை முன்னிட்டு ஐயப்பனுக்கு அணிவிப்பதற்காக கேரளாவில் இருந்து எடுத்து வரப்பட்ட ஐயப்பனின் ஆபரண பெட்டிக்கு தென்காசியில் ஐயப்ப சேவா சங்கம் சார்பில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.
ஐயப்பனின் படை வீடுகளில் ஒன்றான அச்சன்கோவில் தர்மசாஸ்தா கோயிலில் இன்று காலை 9 மணிக்கு மகோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவை முன்னிட்டு ஐயப்பனுக்கு அணிவிப்பதற்காக புனலூர் அரசு கருவூலத்தில் இருந்து ஐயப்பன், கருப்பசாமியின் ஆபரணங்கள் அடங்கிய பெட்டி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது.
இந்த ஆபரண பெட்டிக்கு தென்காசி காசி விசுவநாதர் கோயிலின் முன்பு தென்காசி ஐயப்ப சேவா சங்கம் சார்பில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.
மதியம் 2 மணி முதல் 3 மணி வரை சுமார் ஒரு மணி நேரம் ஆபரண பெட்டி பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டது.
இதில் திருஆபரண பெட்டி வரவேற்பு கமிட்டி பொறுப்பாளர் ஹரிஹரன், ஐயப்ப சேவா சங்க தலைவர் அழகிரி, செயலாளர் மாடசாமி ஜோதிடர், பொருளாளர் சுப்பாராஜ், கவுரவ தலைவர் ராஜகோபாலன், கவுரவ ஆலோசகர் ராமன், ஆலோசகர் மாரிமுத்து, துணை தலைவர்கள் திருமலைக்குமார், அனந்தகிருஷ்ணன், துணை செயலாளர்கள் சந்திரமோகன், பாலசுப்பிரமணியன்
உட்பட ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு ஆபரணப் பெட்டியை வழிபட்டனர்.
பின்னர் அச்சன்கோவில் நோக்கி ஆபரணப் பெட்டி கொண்டு செல்லப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் ஆபரணப் பெட்டி கொண்டு வரப்படுவது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்பி கிருஷ்ணராஜ், டிஎஸ்பி மணிமாறன், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் செய்திருந்தனர்.