காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் நடந்த ஆராதனையில் சோமங்கலம் அடுத்த வரதராஜபுரத்தை சேர்ந்த கிறிஸ்தவ பெண் மதபோதகர் பியூலா செல்வராணி நாடார் சமுதாயம் குறித்து இழிவாக பேசியதாக தெரிகிறது.
அவரை கைது செய்ய வேண்டும் என்று நாடார் சமுதாயத்தினர் சார்பில் குன்றத்தூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் பல்வேறு போலீஸ் நிலையங்களிலும் இது தொடர்பாக புகார் செய்யப்பட்டது.
மேலும் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
இந்த நிலையில் பியூலா செல்வராணி மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் அவர் சோமங்கலத்தில் இருப்பதாக வந்த தகவலையடுத்து குன்றத்தூர் போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.