தீபாவளி பண்டிகை: திருச்சியில் போக்குவரத்து நெரிசல் சரி செய்யப்படுமா ?
தீபாவளி பண்டிகை: திருச்சியில் போக்குவரத்து நெரிசல் சரி செய்யப்படுமா ?
தீபாவளிபண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் திருச்சியில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருப்பதாக பொதுமக்கள் புலம்புகின்றனர்.. திருச்சி மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை பணிகளுக்காக ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்படுவதும், மூடுவதும் என இருப்பதும் இந்த நெரிசலுக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக பாதைகள் பேரிகாட் போட்டு மறைக்கப்பட்டு உள்ளது.
மேலும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மற்றும் லோடு ஆட்டோக்கள் சூழ்நிலைக்கு ஏற்ப முறைப்படி செல்லாமல் தங்களுக்கு தேவையான பாதையை ஏற்படுத்தி செல்வதால் திருச்சி-மதுரை ரோடு, மேலப்பள்ளிவாசல் ரோடு, அண்ணா சிலை, எஸ்.ஆர்.சி காலேஜ் சாலை ஆகிய பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த ரோடுகளில் வாகன ஓட்டிகள் நோ என்ட்ரியை பொருட்படுத்தாமல் எதிர்த்து வருவதால் அதிகமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் சத்திரம் பேருந்து நிலையத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு வரும் அரசுப் பேருந்துகளும், தனியார் பஸ்களும் முறையாக நிற்காமல் தாறுமாறாக நிற்பதாலும் பீக் டைம் எனப்படும் காலை மற்றும் மாலை நேரங்களில் சிட்டிக்குள் வந்து செல்வது என்பது பலருக்கும் பெரிய எரிச்சலை ஏற்படுத்துவதாக பொதுமக்கள் புலம்புகின்றனர்..