திருச்சியில் உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பு சார்பில் மரக்கன்று நடும் விழா
உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பு சார்பில் மரக்கன்று நடும் விழா பொன்மலை பகுதியில் நடைபெற்றது.
ஓசோன் பாதுகாப்பை வலியுறுத்தி பொன்மலையில் மரக்கன்றுகள் நடும் விழா உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமையை வலியுறுத்தும் வகையில் மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பு சார்பில் பொன்மலை பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளர், தண்ணீர் அமைப்பு செயல் தலைவர் கே.சி.நீலமேகம் தலைமை வகித்து, தண்ணீர் அமைப்பு செயலாளர் பேரா.கி.சதீஸ்குமார் முன்னிலையில், தேசிய துப்பாக்கி சுடும் வீராங்கனை சுகித்தா, சுஜித், ரயில்வே ரவி, மோகன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டார்கள்.
கே.சி.நீலமேகம் கூறுகையில் : “மரங்களை அதிக அளவில் வளர்ப்பது பூமியின் வெப்பத்தை குறைக்கவும், சுற்றுச்சூழல் சமநிலையை பாதுகாக்கவும் உதவும். ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஒரு மரத்தையாவது நட்டு, அது மரமாகும் வரை பாதுகாக்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றி, அவற்றை தொடர்ந்து பராமரித்து வளர்ப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
ஓசோன் படலம் பூமியைச் சுற்றியுள்ள வளிமண்டலத்தின் மேல்பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்புக் கவசமாகும். சூரியனில் இருந்து வரும் தீங்கு விளைவிக்கக்கூடிய புற ஊதாக் கதிர்வீச்சின் பெரும்பகுதியை ஓசோன் படலம் உறிஞ்சி, மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கிறது.
ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16ஆம் தேதி உலக ஓசோன் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஓசோன் படலத்தை பாதிக்கும் பொருட்களின் பயன்பாட்டைக் குறைத்தல், சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளை பின்பற்றுதல், மரங்களை வளர்த்தல் போன்ற நடவடிக்கைகள் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு துணைபுரியும்.
“ஓசோனை பாதுகாப்போம்… பூமியை பாதுகாப்போம்… மரங்களை வளர்ப்போம்… வருங்கால தலைமுறையை காப்போம்!” என்ற விழிப்புணர்வு கருத்துடன் விழா நடைபெற்றது.

