கேங்மேன்களை அடிமைபோல் நடத்துவதையும் உடனடியாகக் கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.ஐ.டி.யு. திருச்சி மண்டலம் சார்பில் மின்வாரிய தலைமைப் பொறியாளர் அலுவலகம் முன் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்
கேங்மேன்களை கள உதவியாளராக நியமிக்கக் கோரி சி.ஐ.டி.யு. மின் ஊழியர் மத்திய அமைப்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம்
14.3.2026 முத்தரப்பு ஒப்பந்தத்தின்படி, கேங்மேன் பணியாளர்களை உடனடியாகக் கள உதவியாளராக மாற்றம் செய்ய வேண்டும். விருப்ப இடமாறுதல் பெற்ற அனைத்து கேங்மேன் பணியாளர்களையும் உடனடியாகப் பணியில் இருந்து விடுவிக்க வேண்டும். கேங்மேன் பணியாளர்களின் உழைப்பை அங்கீகரித்து, கள உதவியாளர் பணியிட மாற்றத்தை விரைந்து வழங்கிட வேண்டும். பணிச்சுமை இல்லாத இடங்களில் கேங்மேன் பணியாளர்களைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்துவதையும், அவர்களை அடிமைபோல் நடத்துவதையும் உடனடியாகக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு.) திருச்சி மண்டலம் சார்பில் இன்று செவ்வாய்க்கிழமை தென்னூரில் உள்ள மின்வாரிய தலைமைப் பொறியாளர் அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாநிலத் துணைத் தலைவர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார்.
கோரிக்கைகளை விளக்கி மண்டலச் செயலாளர் அகஸ்டின், திருச்சி பெருநகர் வட்டச் செயலாளர் பழனியாண்டி, தலைவர் நடராஜன், பொருளாளர் இருதயராஜ், புதுக்கோட்டை வட்டச் செயலாளர் நடராஜன், தலைவர் சித்தையன், பொருளாளர் விஜயகுமார், திண்டுக்கல் வட்டச் செயலாளர் திருமலைசாமி, தலைவர் மாரிமுத்து, பொருளாளர் சிரேகா, பெரம்பலூர் வட்டச் செயலாளர் இளங்கோவன், பொருளாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல் மற்றும் பெரம்பலூர் வட்டங்களைச் சேர்ந்த திரளான கேங்மேன் பணியாளர்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

