திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா செல்ல இருந்த பெண் பயணி உயிரிழப்ப.
மலேசியாவை சேர்ந்தவர் எஸ்.ஏ.சாமி. இவரது மனைவி விசாலாட்சி (வயது 62). கடந்த சில வாரத்திற்கு முன்பு தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சுற்றி பார்ப்பதற்காக இந்தியா வந்து உள்ளார். மீண்டும் மலேசியா செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஏர் ஏசியா விமானம் புறப்பட தயாராக இருந்தது.
அப்போது விமானத்தில் அமர்ந்திருந்த விசாலாட்சிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதையடுத்து விமான நிலையத்தில் இருந்த மருத்துவக் குழுவினர் விமானத்தில் ஏறி அவரை பரிசோதனை செய்து உள்ளனர். அப்போது விசாலாட்சிக்கு ரத்த அழுத்தம் மிகவும் குறைவாகவும், படபடப்பாகவும் இருப்பதால் அவரால் பயணிக்க முடியாது என்று மருத்துவர் தெரிவித்து உள்ளார்.
மேலும் அவருக்கு முதலுதவி அளித்த பின்னர் விசாலாட்சியை விமானத்தில் இருந்து இறக்கி மருத்துவ சிகிச்சைக்காக இரவு 10:40 மணிக்கு விமான நிலைய ஆம்புலன்ஸ் மூலம் கண்ட்டோன்மென்ட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து விமான நிலைய காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

