விபத்தில் சிக்கிய தனது தொண்டர்களுக்கு ஆறுதல் கூட கூறாத விஜய் எங்கே? தவெக தொண்டர்களை மருத்துவமனைக்கே சென்று ஆறுதல் கூறி செலவை முழுவதும் ஏற்றுக்கொண்ட அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி எங்கே?
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை பார்ப்பதற்காக சென்று இரு சக்கர வாகன விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கல்லூரி மாணவனை அமைச்சர் அன்பில் மகேஸ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இதுவரை அலைபேசியில் கூட அந்த மாணவனை அழைத்து விஜய், நலம் விசாரிக்காத நிலையில், அமைச்சர் அன்பில் மகேஸ் நேரில் சென்று நலம் விசாரித்திருப்பது பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு தைரியத்தை அளித்திருக்கிறது.
மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செல்லும் விஜய், கடந்த 4-ஆம் தேதி தஞ்சையில் நடைபெற்ற தனது கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்திறங்கி அங்கிருந்து கார் மூலம் தஞ்சை சென்றார். அப்போது அவரை பார்க்க வேண்டும் என்ற ஆர்வ மிகுதியில் அவரது ரசிகர்களான விக்னேஷ், ஆரோன் ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் விஜயின் வாகனத்தை பின் தொடர்ந்து சென்ற போது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.
ஒருவருக்கு தலையில் பலத்த அடியும், மற்றொருவருக்கு இடுப்பு எலும்பு முறிவும் ஏற்பட்டது. இதையடுத்து தஞ்சையில் மருத்துவமனையில்அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்கள்.
இந்நிலையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களிடமோ அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்களிடமோ விஜய் அலைபேசியில் கூட அழைத்து நலம் விசாரிக்காத நிலையில், அமைச்சர் அன்பில் மகேஸ் மருத்துவமனைக்கே நேரில் சென்று நலம் விசாரித்திருக்கிறார்.
அன்பில் மகேஸை பொறுத்தவரை நாகை மாவட்டத்துக்கு பொறுப்பு அமைச்சர் என்பதால், தஞ்சை வழியாகத் தான் திருச்சிக்கும், நாகைக்கும் சென்று வருவதுண்டு.
அவ்வாறு செல்கையில் விஜய் ரசிகர்கள் சிகிச்சை பெறுவது பற்றி தஞ்சை பகுதி திமுக நிர்வாகிகள் கூறியிருக்கின்றனர். இதையடுத்து நேராக மருத்துவமனைக்கே சென்ற அமைச்சர் அன்பில் மகேஸ், நலம் விசாரித்ததோடு, மருத்துவச் செலவைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம், தான் பார்த்துக் கொள்கிறேன் எனக் கூறி பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றொருக்கு தைரியம் அளித்து உள்ளார்.
அரசியல் ரீதியாக ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருப்பினும் அன்பில் மகேஸின் இந்த நலம் விசாரிப்பு சந்திப்பு, தஞ்சை பகுதி த.வெ.க.வினர் மத்தியில் பேசுபொருளாகி உள்ளது.
கரூரில் தவெக கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகிவிட்டனர். அது போல் விஜய்யின் முதல் மாநாடான விக்கிரவாண்டிக்கு சென்னையிலிருந்து வந்த இளைஞர்கள் சாலை விபத்தில் சிக்கி 6 பேர் பலியாகிவிட்டனர். அது போல் விஜய் வர தாமதமானதால் வெயிலின் தாக்கத்தால் மயக்கமடைந்த சார்லஸ் என்பவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பலியானார்.
அது போல் மதுரையில் நடந்த மாநில மாநாட்டின் போது நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ரோஷன் உயிரிழந்தார். அது போல் அரியலூரை சேர்ந்த ஜெயசூர்யா சாலை விபத்தில் சிக்கி உயரிழந்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் பகுதிக் கழக நிர்வாகி பிரபாகரன், விருதுநகர் மாவட்டம், இனாம் கரிசல்குளம் கிளைக் கழக நிர்வாகி காளிராஜ் ஆகியோரும் மதுரையில் நடைபெற்ற மாநாட்டிற்கு பின்பு உயிரிழந்தனர்.
அது போல் சேலத்தில் நடந்த மாநாட்டில் வெயிலின் கொடுமையாக வடமாநிலத் தொழிலாளி சூரஜ்குமார் உயிரிழந்தார்.
அது போல் கரூரில் நடந்த தவெக பொதுக் கூட்டத்திற்கு விஜய்யின் கேரவனை துரத்திக் கொண்டு வந்த இளைஞர்கள் அந்த வாகனத்தின் முன்டயர் அருகே விழுந்தனர். அவர்களின் நிலை என்னவானது என இதுவரை தெரியவில்லை. இப்படி இருக்கையில் ஒரு மரணத்திற்கும், விபரீதத்திற்கும் பொறுப்பேற்காமல், இரங்கல், ஆறுதல் சொல்லாமல் விஜய் அவர் போக்கில் இருந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

