பொது விநியோகத் திட்டத்திற்கு தனி துறை உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
திருச்சி மாவட்டத்தில் 800 ரேஷன் கடைகள் அடைப்பு -பணிகள் பாதிப்பு
கலெக்டர் அலுவலகம் முன்பு பணியாளர்கள் போராட்டம்.
பொது விநியோகத் திட்டத்திற்கு தனி துறை உருவாக்கப்பட வேண்டும். அனைத்து நியாயவிலை கடைகளுக்கும் எடையாளரை நியமனம் செய்ய வேண்டும்,தாயுமானவர் திட்டத்தில் உள்ள பிரச்சனைகள் களையப்பட வேண்டும்,அனைத்து நியாய விலை கடைகளுக்கும் கழிப்பிட வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்,நியாய விலை கடை பணியாளர்களுக்கு நேரடியாக எழுத்தர் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்
என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 27,000 ரேஷன் கடைகளை அடைத்து இன்று தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்சங்கம் சார்பில் போராட்டம் நடந்தது.இதேபோல் திருச்சியில் 800க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து நியாய விலை கடை பணியாளர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இணைச் செயலாளர் செல்வமணி,மாவட்டத் துணைத் தலைவர் எடத்தெரு பாபு,மாநகரச் செயலாளர் ரமேஷ்,மாநகரத் தலைவர் சூரிஉள்பட நூற்றுக்கணக்கான நியாய விலை கடை பணியாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
முடிவில் மாவட்ட செயலாளர் பொன்னர் நன்றி கூறினார்.இதுகுறித்து நியாய விலை கடை பணியாளர் சங்கத் தலைவர் ரமேஷ் கூறும்போது,இன்று வேலைநிறுத்தம் செய்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம்.

நாளை வேலைநிறுத்தம் செய்து கோட்ட அளவில் ஆர்ப்பாட்டமும்,நாளை மறுநாள் வேலை நிறுத்தம் செய்து வட்ட அளவில் ஆர்ப்பாட்டமும் நடத்த உள்ளோம் என்றார்.

