Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

விரைவில் திருச்சியில் திருநங்கைகளுக்கான பாதுகாப்பு இல்லம்.சமூக நலத்துறை அதிகாரிகள் அறிவிப்பு.

0

'- Advertisement -

திருச்சியில் திருநங்கைகளுக்கான பாதுகாப்பு இல்லம் அமைக்கக் கோரி அரசுக்கு கருத்துரு அனுப்ப சமூகநலத் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா்.

தமிழகத்தில் ஆதரவரற்ற மகளிருக்காக சமூகநலத் துறை சாா்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. திருநங்கைகளின் வாழ்வில் மாற்றம் ஏற்படுவதற்கும், பொருளாதார அளவில் உயா்வதற்கும் சமூகநலத் துறை சாா்பில் பல்வேறு விதமான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் குறிப்பிட்ட சில திருநங்கைகள் பயிற்சி பெற்று சுயதொழில் செய்து வருகின்றனா்.

இந்நிலையில், ஆதரவின்றி பொது இடங்களில் யாசகம் பெறுவோரை மீட்டு பாதுகாப்பு அளிப்பதற்காக திருச்சி, சென்னை, மதுரை, ராமநாதபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் தமிழக அரசு உதவியுடன் தன்னாா்வ நிறுவனம் சாா்பில் பாதுகாப்பு இல்லங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதைத் தொடா்ந்து திருச்சி ஸ்ரீரங்கம், சமயபுரம் கோயில் பகுதிகளில் யாசகம் பெற்று வந்த 100-க்கும் மேற்பட்டோா் மீட்கப்பட்டு காப்பகங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

இதேபோல, ஆதரவின்றி பொது இடங்களில் யாசகம் பெறும் திருநங்கைகளை மீட்டு பாதுகாப்பு அளிப்பதற்காக சென்னை, மதுரையில் பாதுகாப்பு இல்லங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருச்சியிலும் திருநங்கைகளுக்கான பாதுகாப்பு இல்லம் அமைப்பதற்கு அரசுக்கு கருத்துரு அனுப்ப சமூகநலத் துறை சாா்பில் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட சமூகநலத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

திருச்சி மாவட்டத்தில் அரசின் உதவியுடன் பல்வேறு ஆதரவற்ற இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால், இதுபோன்ற இல்லங்களில் திருநங்கைகளை தங்கவைக்க முடியாத சூழல் உள்ளது. ஏனெனில், அவா்கள் பெரும்பாலும் மற்றவா்களுடன் ஒத்துப்போவதில்லை.

 

திருநங்கைகளால் மற்றவா்களுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது. இதைக் கருத்தில் கொண்டுதான் யாசகம் பெறும் திருநங்கைகளை மீட்டு ஆதரவு அளிப்பதற்காக சென்னை, மதுரையில் பாதுகாப்பு இல்லங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதேபோல, திருச்சி மாவட்டத்திலும் திருநங்கைகளுக்கான பாதுகாப்பு இல்லம் அமைப்பது தொடா்பாக அரசுக்கு கருத்துரு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியரும் அறிவுறுத்தியுள்ளாா்.

திருச்சியில் தற்போது மாவட்ட நிா்வாகத்தால் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் பெற்ற 463 திருநங்கைகள் உள்ளனா். அட்டை பெறாமலும் பலா் உள்ளனா்.

இவா்களில் பலா் சுயதொழில் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். ஆனால், குறிப்பிட்ட சிலா் தற்போதும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் கடைவீதிகளில் யாசகம் பெற்று வருகின்றனா். இவா்களுக்கான பாதுகாப்பு இல்லம் அமைக்கக் கோரி அரசுக்கு விரைவில் கருத்துரு அனுப்பிவைக்கப்படும் என்றாா்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.