Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி: வாரிசு சான்றிதழுக்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்ட விஏஓ லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் சிக்கினார் .

0

 

திருச்சி மாவட்டம் தாளக்குடியை சேர்ந்தவர் நாராயணசாமி மகன் ரத்தினகுமார். இவரது மனைவி தேவியின் தகப்பனார் ரவிச்சந்திரன் என்பவர் கடந்த 2002 ஆம் ஆண்டு காலமாகியுள்ளார்.

அவரது பெயரில் உள்ள சொத்துக்களை விற்பதற்காக ரவிச்சந்திரன் பெயரில் வாரிசு சான்றிதழ் வேண்டி திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 22.8.2024 அன்று விண்ணப்பம் செய்துள்ளார்.
மறைந்த ரவிச்சந்திரன் வசித்த திருச்சி பீமநகர் பகுதிக்கு உண்டான கோ. அபிஷேகபுரம் விஏஓ அலுவலகத்திற்கு இவரது விண்ணப்பம் கிடைக்கப் பெற்றுள்ளது.

ஒரு வாரம் ஆகியும் எந்த தகவலும் கிடைக்கப் பெறாதால் ரத்தினகுமார் நேற்று 28-8-2024 மதியம் ஒரு மணி அளவில் கோ.அபிஷேகபுரம் கிராம நிர்வாக அலுவலகம் சென்று அங்கே இருந்த விஏஓ செந்தில்குமார் என்பவரை சந்தித்து தனது விண்ணப்பத்தின் நிலை குறித்து கேட்டுள்ளார். அதற்கு விஏஓ செந்தில் குமார் வாரிசு சான்றிதழ் கிடைப்பதற்கு தனக்கும் தனது உயர் அலுவலர்களுக்கும் சேர்த்து மொத்தம் 15000 ரூபாய் லஞ்சமாக கொடுத்தால் உடனடியாக பெற்று தருவதாக கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க பணம் இல்லாத ரத்தினகுமார் தன்னால் அவ்வளவு பணம் தர இயலாது என்று கூறிய காரணத்தால், விஏஓ செந்தில்குமார் உங்களது மனுவை மேல் நடவடிக்கைக்கு அனுப்பி விடுகிறேன் அதற்காக எனக்கு மட்டும் தனியாக ரூ. 3000 கொடுத்து விடுங்கள் என்று கூறியுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத ரத்தினகுமார் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறையில் டிஎஸ்பி மணிகண்டன் என்பவரை சந்தித்து புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரத்தினகுமாருக்கு அளித்த ஆலோசனையின்படி, இன்று 29-8-2024 மதியம் 12 மணியளவில் ரத்தினகுமார் தமது வாரிசு சர்டிபிகேட் மனு மீது உடனடி தீர்வு வேண்டி விஏஓ செந்தில்குமாரிடம் ரசாயனம் தடவிய ரூ.3000 ரொக்கத்தை லஞ்சமாக கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன், காவல் ஆய்வாளர்கள் சேவியர் ராணி, பிரசன்ன வெங்கடேஷ், பாலமுருகன் மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக பிடிபட்டு கைது செய்யப்பட்டார்.

விஏஓ செந்தில்குமார் தமது உயர் அதிகாரிகளுக்கு பணம் கொடுக்க வேண்டும் என முதலில் ரூ.15,000 கேட்டது தொடர்பான மேல் விசாரணையை கிராம நிர்வாக அலுவலகத்திற்கு அருகில் உள்ள வட்டாட்சியர் மேற்கு அலுவலகத்தில் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.