திருச்சி கே.கே நகரையடுத்த சுந்தர் நகர் 7வது கிராசை சேர்ந்தவர் செண்பகவள்ளி (வயது 70) என்பவரின் வீட்டிற்குள் கடந்த 18.10.22 புகுந்து கத்தியை முனையில், அவர் அணிந்திருந்த 6 சவரன் தாலிச்சங்கிலி மற்றும் கையில் அணிந்திருந்த ஒன்றரை சவரன் வளையல் ஆகியவற்றை பறித்த திருச்சி கருமண்டபம் 5வது கிராசை சேர்ந்த முன்னாள் போலீஸ் உதவி கமிஷனர் வீராச்சாமியின் மகன் ரஞ்சித் (வயது 40) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு திருச்சி சிஜேஎம் கோர்ட்டில் நடந்து வந்தது. இதில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
அதில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றத்துக்காக 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், சமையலறையில் மடக்கி சிறை பிடித்து கொலை மிரட்டல் விடுத்ததற்காக ஒரு ஆண்டு சிறை மற்றும் ரூ.1000 அபராதமும், கத்தியை காட்டி மிரட்டி தாலிச்சங்கிலி மற்றும் வளையல்களை பறித்ததற்கு 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும், மொத்தம் ரூ.11 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும். மேலும் இந்த தண்டணைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும். அதோடு பாதிக்கப்பட்டவருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதி மீனா சந்திரா உத்தரவிட்டார். இந்த வழக்கில் சிறப்பு உதவி அரசு வக்கீல் ஹேமந்த் ஆஜரானார்.